வெள்ளி, அக்டோபர் 17, 2008

மின் வெட்டு!!

மின் வெட்டு, இப்ப தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சு தான். டீ கடைகளில் நடக்கும் அரசியல் பேச்சுகளும், வீடுகளில் நடக்கும் தொலைக்காட்சி நாடகம் பற்றிய பேச்சுகளும் இப்பொழுது குறைந்து அந்த இடத்தை மின் வெட்டு பிடித்திருக்கிறது. அந்த அளவு மின் வெட்டினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் கோலங்கள், அரசி என தொலைக்காட்சி தொடர்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்த பெண்கள் இந்த தொடர் மின் வெட்டினால் கொஞ்சம் மறந்திருக்கிறார்கள், இது ஒரு நல்ல விஷயம் தானே!

மின் வெட்டு மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் சீரியசான நிகழ்வுகளை கொஞ்சம் நக்கலோடு இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


" என்னடி எப்பவும் காலையில 7 மணிக்கு எழுந்திருக்கிற நீ இப்பல்லாம் 5 மணிக்கே எழுந்து சமையல் வேலை செய்ற, என்ன தடீர்னு அக்கறை "
" அட போங்க, எல்லாம் இந்த கரண்ட் தொல்ல தான். காலையிலே 7 மணிக்கே கரண்ட் கட்டாயிடும் அதுக்குல்ல வேலைய முடிக்கனுல்ல அதான் " ***


" என்னடி நேத்து தோசை தந்த அதுல அரிசி பாதி பாதியா இருந்திச்சு, இன்னிக்கு தோசை கொஞசம் புளிக்கிற மாதிரி இருக்கே "
" இந்த கரண்ட் எப்ப தான் போகுதுன்னு ஒரு கணக்கு இல்லீங்க அன்னிக்கு மாவு அரைக்கும் போது பாதியில போயிட்டு, நேத்து அதான் கரண்ட் போகுறதுக்குல்ல கொஞ்சம் சீக்கிரமா மாவு அரைச்சு வைச்சேன் பாருங்க புளிச்சு போச்சு. அடிக்கடி கரண்டு போகுற இந்த காலத்தில இதெல்லாம் சகஜம்ங்க " ***


" ஏம்பா கொஞ்ச நாளாவே உன்ன கவனிச்சுட்டு வாரேன் ஒழுங்கா வேலை பாக்குற நீ இப்பெல்லாம் சீட்ல இருந்தே தூங்குறியே.. "
" என்ன சார் செய்ய தினமும் ராத்திரி 10 மணிக்கு போற கரண்டு 12 மணிக்கு தான் வருது, இந்த வெயில் காலத்துல கரண்ட் இல்லாம ஒரே புழுக்கம், 12 மணிக்கு கரண்டு வந்தப்புறம் தான் தூங்க முடியுது, நான் என்ன செய்யட்டும் அதான்.. பேசாம ஆபீஸ் டயத்தை கரண்டு போற நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்துன நல்லாயிருக்கும்... " ***


" என்ன கொடுமடி இது, இவ்வளவு சங்கதி நடந்திருக்கா, மருமக ஒழுங்கா தானடி இருந்தா என்னாச்சி அவளுக்கு.. இந்த கரண்டு போற நாளுல இருந்து நாடகம் பாக்க முடியாம போச்சு.. எப்ப கரண்டு ஒழுங்கா வந்து எப்ப நானு நாடகத்தை பார்க்க.. "
" என்னடி பேசுற.. இவ்வள நேரம் நான் என் மருமகள பத்தி சொல்லிகிட்டு இருந்தா, நீ நாடகம்னு கேட்டுட்டு இருந்தியாக்கும்.." ***

" ஓயாம கரண்டு போறது ரொம்ப தொந்தரவா போச்சுங்க "
" ஏன் என்னாச்சு "
" ஓழுங்கா டீவில நாடகம் பாத்துட்டு இருந்த உங்க அம்மா, இப்ப அடிக்கடி கரண்டு போற நாளுல இருந்து, என்கிட்ட அதை இதை பேசி சண்டை செய்றாங்க..அய்யோ எப்ப கரண்டு கட் இல்லாம இருக்குமோ..." ***


" என்னடி கினத்துல தண்ணி இரைக்கிற, நேத்து தானே தண்ணி முறை அதுக்குள்ள தண்ணி காலியா? "
" நீ வேற, சும்மாவே நாலு நாளைக்கு ஒரு முறை தான் தண்ணி விடுறாங்க, இதுல வேற கரண்ட் போயிடுது, தண்ணி வர்ர நேரத்துல கரண்டு போயிட்டு தண்ணி வரல்ல. தூத்துக்குடிய மாநகராட்சியா மாத்துனாலும் மாத்துனாங்க தினம் தினம் பிரச்சணை அதிகமாயிட்டே போகுது.. என்ன செய்ய.. " ***

- மே. இசக்கிமுத்து