வெள்ளி, பிப்ரவரி 25, 2011

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி !


ண்மையில் நான் தூத்துக்குடிக்கு சென்றிருந்த போது, அங்கு ஒரு விஷயத்தை என்னால் கவனிக்க முடிந்தது. அது அனேக வீடுகளில் தமிழக அரசு வழங்கிய 14" இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தது. அத்தோடு மற்றொன்றையும் சொல்ல வேண்டும். அதன் பக்கத்திலேயே அவர்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் 21' அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. சில வீடுகளில் LCD திரை கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் பார்க்க நேர்ந்தது. பலர் ஒரு அறையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் மற்றொரு அறையில் பெரிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும். இன்னும் சொல்லப் போனால் அனேக வீடுகளில் இப்பொழுதெல்லாம் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள். நன்றி தமிழக அரசுக்கு!! சிலர் தங்களுக்கு கிடைத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் அட்டை பெட்டியை திறக்காமலேயே அதை தேவையற்ற ஒரு பொருள் போல மூலையில் போட்டிருக்கிறார்கள். பொதுவாகவே மக்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது, அது இலவசமாக எது கிடைத்தாலும் வாங்கி விடுவது, அது தேவையா இல்லையா, உபயோகப்படுமா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், இலவசம் என்றால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் பழக்கம். நம் ஊரில் சொல்வார்களே, " கப்பல்ல பொண்ணு வருதுன்னா, அவனுக்கு ஒன்று, அவன் அப்பாவிற்கு ஒன்று, அவன் தாத்தாக்கு ஒன்று கேட்பானாம் " அது போல தான்.

3492 கோடியே 72 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 62 ட்சத்து 80 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிட்டு, இது வரை 1 கோடியே 58 லட்சத்து 228 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தமிழக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 05.02. 2011 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த 2011-12 ஆண்டிற்கான இடைக் கால வரவு செலவு அறிக்கையில் மேலும் ரூ.249 கோடியில் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்ள கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.06.2006 தேதியிட்ட அரசாணை எண் 3 ல், " மகளிருக்கு பொழுது போக்கிற்காகவும், அவர்கள் பொது அறிவு பெறவும் வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, அவை இல்லாத குடும்பங்களுக்கு வழங்க இந்த அரசு கருதியுள்ளது ". இந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன், அதன் உண்மையான பயனாளிகளுக்கு போய் சேர்கிறதா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்ல முடியாது.

இத்திட்டம் செயல்படுத்துவதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. முதலில் அந்தந்த பகுதிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளை அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். பின்பு அதற்கேற்ப திட்டமிட்டு செலவினங்களை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். கணக்கெடுப்பில் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள், அந்த வார்டு உறுப்பினர் போன்றவர்களை ஈடுபடுத்தியிருக்கக் கூடாது. இவ்வாறு செய்திருந்தால் இந்த திட்டத்தின் பயன் அதன் உண்மையான பயனாளிக்கு சென்றிருக்கும். மேலும் அதிகப்படியான மற்றும் தேவையில்லாத செலவினங்களை தவிர்த்திருக்கலாம். அதை கொண்டு நல்ல பல பயனுள்ள திட்டங்களை செயல் படுத்தியிருக்கலாம். இன்னமும் தமிழ் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் நல்ல சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. கிராமத்தில் மற்றும் நகரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் பயனுக்காக பல வசதிகளை செய்திருக்கலாம். அந்த நிதியை கொண்டு இன்னும் எவ்வளவோ மக்களுக்கு மிகவும் தேவையான திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.

பல திட்டங்களை செயல்படுத்துவதில் அரசியலும் அரசியல்வாதிகளும் இடையில் வரும் வரை அத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையாமல் போய்விடும்..

வியாழன், பிப்ரவரி 10, 2011

கருவறை கதறல்கள்!

நீ சிந்தித்த போதெல்லாம்
உன் சிந்தையில் ஓர் மூலையிலே
கருவென நுழைந்தோமே,
ஒரு வரியில் இரு வரியில் பல வரியில்
முகவரிகள் தருவாயென
முடங்கிக் கிடந்தோமே!
உன்னுள் ஓர் உயிராய் உரைக்கிறோமே,
உறங்கும் நேரத்து உலறல்களென உதறிவிடுகிறாயே!

நீ ஆனந்தமாய் சிரிக்கும் போது
அங்கும் இங்கும் குதிக்கிறோம்!
கோபப்படும் போது
அடுப்பில் அனலாய் சிவக்கிறோம்!
வருத்தப்படும் போது மட்டும்
வழியறியாது விழிக்கிறோம்!
ஏனென்றால்,
உன்னில் எமை காண்கிறோம்,
எம்மை கவிதையாய் பிரசவித்திடு
எம்மில் உனை காணலாம்!!

மானிடராய் ஜனித்திருந்தால்
மாதம் பத்தில் பாரினை பார்த்திருப்போம்!
தாமதமானால் தலைதிரும்பவில்லை என்ற
தலைவலி எங்களுக்கில்லை!
பிரசிவிப்பதை தள்ளி போட்டால்
பிரச்சனையென சொல்லி,
பிள்ளையும் பெண்ணும் பத்திரமாய்
பல வழிகள் இருக்க பயப்படத் தேவையில்லை!

விதைகளாய் மண்ணில் விழுந்திருந்தால்
மழையில் நனைந்து மலர்ந்திருப்போமே!
கதைகளாய் நாங்கள் இருந்திருந்தால் - உன்
மழலையின் மடல்களில் மகிழ்ந்திருப்போமே!
புதிதாய் மறுமுறை பிறந்திருப்போமே!!

உன் மனதில் அல்லவா விழுந்துவிட்டோம்,
உயிர்பெற உருபெற உருக்கமாய் வேண்டுகிறோம்!
கவிதையாய் வெளிவர விரும்புகிறோம்
கனவென கலைய அல்ல
கருத்தென நிலைக்க!
செந்தனலென தெறிக்க!
சிந்தனையில் சுலீரென உரைக்க
பலர் வாசிப்பில் வாழ வேண்டும்!!

அதுவென்று இதுவென்று நீ
அடுக்கடுக்காய் காரணங்கள் ஆயிரம் சொல்லலாம்,
அத்தனையும் சோம்பேறித்தனம்
அடித்து சொல்லிடுவோம்!
பகல் தூக்கத்தை பாதியாய் குறைத்துக் கொள்ளேன்,
ஞாயிறு விழிக்கும் முன்பு
ஞாபகமாய் எழுந்து கொள்ளேன்!

ஐந்து நாட்கள் பணி மிகுதி தான்,
வாரயிறுதி முழுவதும் வேண்டாம்,
முக்கால் மணி நேரம் போதும்,
உன் மனகருவறையிலிருந்து
கவி பிரசவம் சுகமாய் நடந்தேற
முக்கால் மணி நேரம் போதும்!!

உன் சிந்தனை சிதறல்கள்,
கவி சிற்பமாய் காகிதத்தில் விழும் நாள்,
எங்கள் விடியலின் முதல் நாள்!
அது வரை கண்ணீர் கதறல்கள்!!