திங்கள், செப்டம்பர் 30, 2024

தூங்க வைத்த கதைகள் !!

நிலவில்லா நேரங்களில் 
நிசப்தமாக நகரும் அந்த கதைகள் !
மாயாஜால காட்சிகள் 
மனத்திரையில் வந்து செல்லும்,
மறு நொடியே மாயமென மறைந்து கொள்ளும் !

காற்றில் அசையும் தென்ங்கீற்றில்
கரிய உருவம் கையசைக்கும்!
பனை மரத்தின் காவோலை
படபடவென கைதட்டும்,
பயத்தோடு கதையும் பாதியில் நிற்கும் !

அப்பாவை அணைத்துக் கொண்டு 
அப்படியே தூக்கம் வரும்!
ஆனாலும்,
கதைகளின் நீட்சி 
கனவிலும் தொடர்ந்து வரும் !

இறக்கை முளைத்த ஒற்றை குதிரையில் 
இளவரசியை தேடி,
மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி,
மாவீரனின் சாகச கதைகள் !

அரசனின் சேனைகளும்,
அரண்மனை கோபுரங்களும்,
அரங்கேற்ற மண்டபமும்,
அப்பா சொல்ல சொல்ல,
அத்தனையும் வானில் 
நட்சத்திரங்களின் நடுவே,
அற்புதமாய் காட்சி தரும் !

தாத்தா அப்பாவிற்கும்,
பாட்டி அம்மாவிற்கும்,
அதன்பின் அப்பா எனக்கும்,
அக்கறையாய் அன்போடு,
வழி வழியாய் சொல்லி வந்த
வாய்மொழி கதைகள் !

அப்பா சொன்ன கதைகளை
நான் பிள்ளைகளுக்கு 
சொல்லும் போது,
கயிற்றுக் கட்டிலின் கதகதப்பும்,
முழு நிலா உலாவும் வான வீதியும்,
அப்பாவின் ஸ்பரிசமும்,
மனமெங்கும் நிறைந்து 
மெய்சிலிர்க்க வைத்துவிடும் !

இப்போது கூட,
தூக்கமில்லா இரவுகளில் - என் 
தலை கோதி தாலாட்டி,
தூங்க வைக்கும் கதைகள் அது !!

                             -  மே. இசக்கிமுத்து

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2024

தாளமிடும் தவிப்புகள் !

 

நெடுநாட்களாக,
நெஞ்சினில் இருந்த காதல்,
மழலையின் மொழியாய்,
சொல்லி விடு சொல்லி விடுவென்று
செல்லமாய் அடம் பிடித்த போது,
சரி சரியென்று 
சமாதானம் செய்த மனதிற்கு,
உள்ளுக்குள் ஓர் படபடப்பு,
உறங்கினாலும் உலுக்கி விடும் !

தயக்கமின்றி சொல்லி விட,
தனக்குத் தானே பேசி பேசி
தலையசைத்து தைரியத்தோடு,
ஒத்திகைகள் நிதமும்
ஒன்றா இரண்டா !

ஒரு வழியாக மனமும் 
உறுதியோடு காதலை சொல்லி,
உச்சந்தலை சுளீரென உணர,
உடம்பெல்லாம் விறுவிறுக்க,
ஓடி வந்த மனதிற்குள் 
ஓராயிரம் மின்னல்கள் 
ஒரே நேரத்தில் ஜாலமிட,
பதிலுக்காக காத்திருக்கும் !

தேர்வெழுதி வந்தபின்பு,
தேரிவிடும் என தெரிந்தாலும்,
முடிவிற்காக காத்திருக்கும் 
மாணவரின் மனநிலையில் 
மனதிற்குள் தவிப்புகள் தாளமிடும் !

இயல்பாக இருந்தாலும்,
இதயத்துடிப்பு இரட்டிப்பாகும் !
காகம் கரைந்தாலும் 
காதல் மொழியாய் காதில் விழும் !
சிட்டுக்குருவி சிணுங்கினாலும்,
சிலிர்த்திடும் மனமெங்கும் !

நடுநிசி கடந்த போதும்,
நீண்டுச் செல்லும் இரவுகள்!
உருண்டு புரண்டு படுத்தாலும்,
உறக்கம் வர அடம்பிடிக்கும்!
அலாரம் அடிக்கும் முன்பே,
அதிகாலையில் விழிப்பு வரும் !

யாரோ யாரையோ கூப்பிட்டாலும்,
நம்மை தானோ வென்று மனம் 
திரும்பி திரும்பி பார்க்க தோன்றும் !
வாசலோரம் தலையசைத்து 
வரவேற்கும் செவ்வந்தியின் காதுகளில்,
புதுக்கவிதை சொல்ல தோன்றும் !

வானொலியில் பாடல் வரும்,
வரிகளோடு உதடுகள் தாளமிடும் !
சண்டைக்காரி தங்கை முறைத்துக் கொண்டு 
வக்கணை செய்தால்,
வெட்கத்துடன் வெடுக்கென்று  கோவம் வரும் !
தட்டில் சோறிருக்கும்,
தனை மறந்து சிரிப்பு வரும் !

கைபேசி மணியோசையும் 
காதல் ராகம் இசைத்திடும் !
குறுஞ்செய்தி ஒலி கேட்டு 
குதூகலிக்கும் மனது !
நிசப்த வேளைகளில்,
நிமிடத்திற்கு ஒருமுறை 
கைபேசியை உற்று உற்று பார்த்திடும், 
ஏதுமில்லை என்றாலும் 
ஏக்கத்துடன் எடுக்க தோன்றும் !

காத்திருக்கும் நாட்களில்,
கானும் இடங்களிலெல்லாம்
காதல் மட்டும் நிறைந்திருக்கும் !!

                         - மே. இசக்கிமுத்து



வியாழன், மே 16, 2024

ஆத்தாவின் அனபு !!



ப்பாவின் அம்மா அவள்
ஆத்தா என்றே அழைத்திடுவோம் !
வெள்ளந்தி மனசுக்கும்
உள்ளார்ந்த அன்புக்கும் 
உதாரணம் அவள் !!

அவளின் சின்ன சின்ன தேவைகளை,
அன்றாடம் குறைத்து கொண்டு, 
சேலையின் முனையில் 
சில்லரை காசுகளை முடிச்சி போட்டு 
சேர்த்து வைப்பாள் !!

சேர்த்து வைத்த காசுகளை 
செல்ல பேரன்கள் எங்களுக்கு 
சுருக்கம் கொண்ட கன்னங்கள் குழிவிழ
சிரித்துக்கொண்டே கொடுக்கும் போது,
குழந்தை உள்ளம் குதூகளிக்கும் !!

பஞ்சு மிட்டாய்காரனை பார்த்துவிட்டால்
பத்து பைசாவும் இருபது பைசாவும்
இருப்பு கொள்ளாது !!

சவ்வு மிட்டாய்க்காரனிடம் பேரம் பேசி 
சற்று கூடுதலாய் வாங்கி தந்து,
நாங்கள் ருசித்து சாப்பிடும் அழகை
அருகிலிருந்தே ரசித்திடுவாள் !!

குருணை அரிசி சோற்றை 
கோபுரமாய் குழைத்து வைத்து, 
குவியலின் நடுவே குழம்பை ஊற்றி ,
எல்லாத்தையும் சாப்பிடு
எட்டணா தருவேன் என்பாள் !!

நாலணா எட்டணா வாங்கிக்கொண்டு, 
நாளெல்லாம் சட்டைப்பையை 
நிமிடத்திற்கொருமுறை தொட்டுப் பார்த்து
மணிக் கணக்கில் மகிழ்ந்திருப்போம் !!

அப்பாவிடம் அடம்பிடித்து கிடைக்காததெல்லாம் 
ஆத்தாவிடம் சொன்னால் போதும் 
அடுத்த நாளே கிடைத்துவிடும் !!
அவளின் சேலை முனையின் முடுச்சி 
 சில்லரைகளை அள்ளி தரும் அட்சய பாத்திரம் !!

என்றும் இல்லையென்று சொன்னதில்லை,
இன்று அவள் இல்லையென்றாலும், 
என் கையிலிருக்கும் காசுகளில் 
கலகலவென  தினமும் 
சிரித்துக்கொண்டு தான் இருக்கிறாள் !!

                                          - மே. இசக்கிமுத்து