உள்ளங்கால் ஊன்றிட
உயிர் போகும் சுடு மணலில்
ஓடித் திரிந்த இளங்கன்று,
இளைப்பாற இடம் தேடி
புளிய மரத்தடியில் வந்து நின்று
' மா ' வென்று இருமுறை
வயிறுவொட்ட கத்தியது !
மேற்பக்க வரப்பை தாண்டி
மேச்சலில் நின்றிருந்த தாய் பசுவும்
குரல் வந்த திசை நோக்கி
' ம்மா ' வென்று அழுத்தமாக
தலையசைத்து கத்தியது !
டேய் சுடலை எங்கடா இருக்க?
களையெடுத்துக் கொண்டிருந்த
கந்தனின் குரல் கேட்டு
குதூகல பாய்ச்சலில்
ஓடி வந்து நின்றதங்கே
இளங்கன்று சுடலையாண்டி!
மறுகனமே மடி சுரக்க
' ம்மா ' வென்று தாய் பசுவும் அழைத்திட,
மான் போல துள்ளிக் கொண்டு
மடி முட்டிக் குடிக்கும் பொழுது,
மனமெங்கும் உணர்ச்சி பெருக,
கந்தனின் கண்களில் நீர் துளிகள்!
தாயுள்ளம் ததும்பி நிற்க,
தடவிக் கொடுத்து நின்றிருந்தான் - அந்த
தாயுமானவன் !!
- மே. இசக்கிமுத்து