திங்கள், ஜூன் 13, 2011

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து !


ரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (13.6.2011) தொடங்க உள்ளது. பிளமிங்கோ லைனர்ஸின் " ஸ்காட்டியா பிரின்ஸ் " என்ற சொகுசு கப்பல் இன்று தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லயிருக்கிறது, இந்த கப்பல் சேவையின் மூலம் இந்தியா, குறிப்பாக தென்னிந்தியா - இலங்கை இடையிலான சுற்றுலா மற்றும் வணிகம் மேம்படும். மேலும் இரு நாட்டு மக்களிடையிலான பண்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஏற்பட இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இந்த கப்பல் சேவையை 2001ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு நான் தூத்துக்குடியில் Flyjac Logisticsயில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது இந்த பயணிகள் கப்பல் சேவைக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக தொடங்கியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டுவிடும் என்று பரவலாக பேசப்பட்டது. பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான முகவர்கள் நியமண விளம்பரங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தன.

வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகளை கையாளும் நிறுவனத்தில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றியதால் பல நாடுகளில் உள்ள எங்கள் நிறுவனத்தை சார்ந்த தொழில் ரீதியான முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பல பேர்களின் தொடர்பு எனக்கு இருந்தது. அது போல இலங்கையிலும் எங்கள் முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலரின் அறிமுகம் எனக்கு இருந்தது. அதனால் அந்த ஆண்டு தொடங்கப்படவிருந்த பயணிகள் கப்பலில் முதலாவது சேவையில் கொழும்புக்கு செல்ல வேண்டும் எனற ஆசை என்னுள் எழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அடுத்த வாரத்திலேயே திருச்சிக்கு சென்று திருச்சியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அம்மா என்னிடம் " எதுக்கு இப்ப பாஸ்போர்ட்? நீ எங்க போக போற? ". எதுக்கும் இருக்கட்டுமே என்று சொல்லிக்கொண்டேன். நான் விண்ப்பித்த ஒரு மாதத்தில் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட்டது. ஆனால் பாருங்கள் அரசாங்கம் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை கிடப்பில் போட்டது, அதற்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் சொல்லப்பட்டது.

மீண்டும் பத்து வருடங்கள் கழித்து இந்த திட்டம் இப்போது உயிரோட்டம் பெற்றிருக்கிறது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எனது பாஸ்போர்ட்டின் காலம் முடிந்து விட்டதே..என்ன செய்வது, அதை புதுப்பித்தாக வேண்டும், அதற்கெல்லாம் இப்போது என்னிடம் நேரமிருப்பதாக தெரியவில்லை. பிறகு பார்க்கலாம்..எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்!!! என்றாலும் பாரதியின் இந்த பாடல் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

" முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே! "

வெள்ளி, ஜூன் 10, 2011

அனுபவமே ஆண்டவன்!!


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

- கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசனின் கவிதைகளில் மீண்டும் மீண்டும் நான் படித்து ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. வாழ்வின் தத்துவங்களை அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற கவிஞரின் கருத்தில் எவ்வளவு உண்மை உள்ளது!!!