புதன், டிசம்பர் 31, 2008

புதிதாய் வாழ்ந்திடுவோம் !!

தோ இன்னுமொரு ஆண்டு
இப்போதும் நமக்காக,
இயற்கையை நேசித்திட
இன்னல்கள் தவிர்த்திட!

இயற்கையை நேசித்தால்,
பருவம் தப்பிய மழையுமில்லை
பாரினில் எங்கும் வெள்ளமில்லை!

பேரலை பீதியும்
பெருந்துயர் இன்னலும்
வரும் நாளில் வருவதில்லை!
இயற்கையோடு இணைந்த வாழ்வு
இறைவனோடு வாழும் வாழ்வு!

உலக மாந்தரெல்லாம்
உற்றோராய் உறவு கொள்வோம்!
மானுடம் மாண்புற
மனித நேயம் காத்திடுவோம்
பின்பு ஏதிந்த
தீவிரவாதமும் தீராத சண்டையும்!

நடந்தவையெல்லாம் பழங்கதை
நாளையே முளையட்டும் புது விதை!
புதிய சிந்தனை வந்ததுமே
புவியினில் நிலைத்திடும் ஆனந்தமே!

இயற்கையை காத்திடுவோம்
மனிதநேயம் வளர்த்திடுவோம்
புத்தாண்டில் புதிதாய் வாழ்ந்திடுவோம்!!

- மே.இசக்கிமுத்து

திங்கள், டிசம்பர் 29, 2008

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
தன்னை போல் பிறரை கருதும்
தன்னலம் மறந்த மனிதர்கள்!
அருகிலிருப்பவன் அவதிபட்டால்
அனலாய் துடிக்கும் அன்புள்ளங்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
ஏ‍ழை பணக்கார ஏற்றத் தாழ்வுகள் என்றுமில்லை!
சக மனிதர்களையும் சகோதரர்களாய்
எண்னும் இவர்கள் சிந்தனையில்
பகலவன் பார்த்த பனிதுளி போல்
சாதியும் மதமும் துளியுமில்லை!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
கருவிலிருப்பது பெண்ணென தெரிந்தும்
பெருமை பேசி பேரானந்தங்கொள்ளும்
பெற்றோர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
தொழிற்சாலைகளிலும் தெருவோரங்களிலும்
துவண்டு கிடந்த பிஞ்சு உள்ளங்கள்
சிறகு முளைத்த சிட்டுக் குருவிகளாய்
துள்ளி திரியும் இளங்கன்றுகளாய்
கல்விசாலையில்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
வேலையற்று சுற்றி திரிந்த
சோம்பேறி கூட்டமும்
எப்போதும் கத்தியும் கம்புமாய்
காட்சி தந்த அடாவடி கூட்டமும்
மண்வெட்டியும் கையுமாய்
அவரவர் வேலைக்கு அதிகாலையில்
எழுந்து செல்லும் அற்புத காட்சி!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மேகங்களுக்கிடையே
முளைத்து நிற்கும் வெள்ளிகளாய்
பச்சையுடுத்திய நேற்வயல்களுடே
நிதர்சனமாய் இளைஞர்கள்!
விவசாய விஷயங்களை வீட்டிற்கு மட்டுமல்ல
இணையத்தின் மூலம்
இவ்வுலகத்திற்கே சொல்லி
புது புரட்சி கண்டவர்களாய்
இந்திய இளைஞர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
நாட்டில் பட்டம் வாங்கி
அரசாங்க ஆணைக்காக காத்திராமல்
ஆளுக்கொரு தொழிலை
அக்கறையாய் உருவாக்கி
ஆர்வமுடன் உழைக்கும் இளைஞர்கள்!
இங்கே இளைஞர்கள்
வேலையில்லா பிரச்சனைக்கு விலங்கிட்டவர்கள்!
தீவிரவாதத்திற்கு தீயிட்டவர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
அனுசக்தியை ஆக்க வழியில் பயன்படுத்தும்
அற்புத வழிகளை ஆராய்நது
அகிலத்திற்கு சொல்லிடும் விஞ்ஞானிகளாய்
இந்திய இளைஞர்கள்!
விண்வெளி விஞ்ஞானத்திலும்
கணினி கலையிலும் இந்திய இளைஞர்களால்
உலக விஞ்ஞானிகளின் முழு கவனமும்
இந்தியாவின் பக்கமே!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மனமிருந்தால் போதும்
மதமும் சாதியும் தேவையில்லை!
கருத்‍தொன்றினால் போதும்
காலங்காலமாய் காதலை வாழ வைக்க
காதலுக்கு காவலாய் நாங்களுள்ளோம்
இது காதலர்களின் பெற்றோர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
வஞசமில்லா உள்ளமும்
வளமான எண்ணமும் தான் வாழ்க்கைக்கு தேவை,
வரதட்சணையல்ல!
பெண்களுக்கு வாழ்வளிக்க நாங்களுள்ளோம்
இனி வாழாவெட்டி பட்டமுமில்லை
முதிர் கன்னி முத்திரையுமில்லை
முழங்கும் இளைஞர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மகத்தான வாழ்வை
மரண பாதைக்கு விரைந்து மாற்றிடும்
மயக்கும் போதையை மறந்தும் கூட
நினைப்பதில்லை இந்த மனிதர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
உள்ளத்தில் கள்ளமில்லை
ஒழுக்கத்தில் குறையுமில்லை
கீழ்மட்ட எண்ணமும் எங்களுக்கில்லை
எயிட்சுக்கு இனி வழியுமில்லை!
மகிழ்வுடன் மார்தட்டும் மனிதர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
அர்த்தமற்ற அறிக்கைகளும்
மக்கள் அமைதியை கெடுக்கும்
அரசியல் கலவரமும் அராஜக அலுவல்களும்
அடியோடில்லை!
இங்கே கூட்டணி பல அமைத்தாலும்
கூட்டங்கள் பல நடந்தாலும்
மக்கள் நலனே மனதில் ‍கொள்ளும்
மகத்தான அரசியல் தலைவர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
ஆண்டுக்கொருமுறை வந்து போகும்
தீபாவளி பொங்கலல்ல தேர்தல்!
ஐந்தாண்டுக்கொருமுறை மலரும்
மகரந்த பூக்களாய் மக்கள் உரிமைக்கு
உயிர் கொடுக்கும் ஊக்க சக்தியாய் தேர்தல்!!

இங்கே தேர்தலுக்கு பின்
வாக்குறுதிகளையும் வட்டத்தையும் மறவாமல்
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய
நிதமும் போட்டியிடும் அரசியல்வாதிகள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
அன்பளிப்பென்று அர்த்தம்பாவித்து
லட்சமாய் கொடுக்கும் லஞ்சம்
அரசு அலுவலர்களின் லட்சிய கடமையில்
அரசியல் தலைவர்களின்
மக்கள் நல கொள்‍கையில்
மாயமென மறைந்து போயின!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
காஷ்மீர் மலைப்பகுதி
காதலர்களுக்கு கூடி மகிழும்
கவின்மிகு சோலை!
புதுமண தம்பதிகளுக்கு
தேனிலவு சொர்க்கம்!
இங்கே,
அந்நிய ஊடுறுவலும்
ஆயுத முழக்கங்களும் அறவேயில்லை!!

அந்நிய தேசங்கள்
அதிசயத்து நோக்கும்
இந்திய திருநாட்டை
நினைத்து பார்க்கையில்
நெஞ்சில் குற்றால அருவியாய்
சந்தோஷ சாரல்கள்!!

தாய் மண்ணே வணக்கம்!
தவறி விழுந்தேன் தரையினில்!
அடடா அதிகாலை கனவு!
அதிகாலை கனவு அப்படியே பலிக்குமாம்
அம்மா சொல்லக் கேள்வி!!

தரையில் விழுந்த என்னை
வரவேற்றுக் கொண்டது நண்பனின் வாழ்த்து மடல்!

" எண்ணங்கள் ஈடேற
கனவுகள் உயிர்பெற
கனிவான வாழ்த்துகள் "

என் கனவுகள் உயிர்பெறுமா?
சமத்துவம் காக்க
சரித்திரம் படைக்க
இருக்கிறோம் நாங்களென்று
இளைஞர்கள் இருக்கையில்
வேறென்ன வேண்டுமிங்கு!
நிச்சயம் ஒரு நாள்
என் கனவுகள் உயிர் பெறத்தான் போகிறது
என் உள் மனமும் சொன்னது!!
இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!!

- மே. இசக்கிமுத்து


குறிப்பு:- நான் எழுதிய இந்த கவிதை, M/S.FLY JAC LOGISTICS ன் பத்திரிகையான " JAGRATHA"வில் ஜனவரி 2000 இதழில் வெளியானது (நான் அப்பபொழுது அந்நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிகொண்டிருந்தேன்).

பிறகு 14.08.2001 அன்று பகல் 12.00 மணி அளவில் திருநெல்வேலி வானொலி நிலைய ஒலிப்பதிவு கூடத்தில் எனது குரலிலேயே ஒலிப்பதிவு செய்யப்பட்டு, 29.08.2001 அன்று காலை 9.45 மணிக்கு ஒலிப்பரப்பான " இளைய பாரதம் " நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பான எனது இரண்டாவது கவிதை இது!!

புதன், டிசம்பர் 24, 2008

கடை தேங்காய்...


ஹோட்டல் வி.டீ பேரடைசில் 17.12.2008 முதல் 19.12.2008 வரை பார்ஸன் இண்ஸ்டிடியுட் ஆப் ஸ்டாட்யூடரி ரூல்ஸ் (PARSAM INSTITUTE OF STATUTARY RULES, BANGALORE) நடத்திய அரசு அலுவலர்களுக்கான " ACCOUNTING STANDARDS AND READING BALANCE SHEET " என்ற பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்காக எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னை அனுப்பியிருந்தார்கள். நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்வதால் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கலந்து கொண்டேன்.

பயிலரங்கின் முதலாம் நாள் முடிவிலே எனக்கு புரிந்து விட்டது, இது அரசு R&D NON PROFITABLE ORGANISATION னில் பணி புரியும் என்னை போன்றோர்க்கு எந்த பயனுமில்லை, ஏனென்றால் பயிலரங்கில் சொல்லி தந்ததோ லாபம் ஈட்டும் கம்பெனிகளில் பணி புரிபவர்கள் தெரிந்து கொள்ள, கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள், அரசு R&D NON PROFITABLE ORGANISATIONனுக்கு அது பொருந்தாது. ஐயோ தேவையில்லாமல் என்னையும் அனுப்பி பயிலரங்க கட்டணமாக ரூ. 6180/- வேறு கொடுத்துவிட்டார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அங்கு மற்றொரு விஷயத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம் இது தான்.

இந்த பயிலரங்கில் பெங்களூரில் உள்ள மற்றொரு அரசு R&D NON PROFITABLE ORGANISATION ஆன ADA (AERONAUTICAL DEVELOPMENT AGENCY) வில் இருந்து 10 பேர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசும் போது தான் தெரிந்தது அந்த 10 பேரில் 5 பேர் தொழில்நுட்ப பிரிவில் (SCIENTIFIC & TECHNICAL STAFF) உள்ளவர்கள் என்று. நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்யும் எங்களுக்கே இப்பயிலரங்கம் பயனற்று இருக்கும் போது தொழில்நுட்ப பிரிவில் உள்ளவர்களை அவர்களுடைய நிறுவனம் எப்படி அனுப்பியது? பிறகு தான் புரிந்தது ADAவில் நிதி மற்றும் கணக்கியல் அதிகாரியாக இருக்கும் திரு.நாகராஜா என்பவர் இப்பயிலரங்கை நடத்தும் பார்ஸன் இண்ஸ்டிடியுடிற்கு மிகவும் நெருக்கமானவர், மேலும் இந்நிறுவனம் நடத்தும் எல்லா பயிலரங்கிற்கும் இவர் தான் ஒருங்கிணைப்பாளர். எனவே தான் அவருடைய அலுவலகத்தில் இருந்து அதிகமான நபர்களை தேர்வு செய்து அனுப்ப முடிந்தது. மேலும் திரு.நாகராஜாவிற்கு பல அரசு நிறுவனங்களிலுள்ள உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம். இந்த நெருக்கத்தினால் பார்ஸன் இண்ஸ்டிடியுட் நடத்தும் பயிலரங்குகளில் நிறைய பேரை பங்கு கொள்ள செய்ய முடிகிறது. அதில் ஒன்று தான் எங்கள் நிறுவனம் இந்த பயிலரங்கிற்கு என்னை அனுப்பியது. அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக எங்கள் துறை தலைவரை சந்தித்து இந்த பயிலரங்கத்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியபோது அவர் " மற்ற ACCOUNTING STANDARD பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் அனுப்பினேன் " என்றவாறு சமாளித்துக் கொண்டார்.

அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்காக செலவு செய்யும் போது அதில் ஏதேனும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும். பயன் இல்லை என்று தெரிந்தால் அந்த செலவை குறைத்து கொள்ளலாம். இதனால் நேரத்தையும் அந்த பணத்தையும் பயனுள்ள விதத்தில் செலவிடலாம்.

இது போன்ற வீண் செலவினங்கள் நிறைய அரசு அலுவலகங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை குறைக்க வேண்டும் என கூறி அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறது. மறு புறம் பல அரசு அலுவலகங்களில் தேவையற்ற செலவினங்கள் தான் அதிகமாக இருக்கிறது. என்ன சொல்வது. நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்களே " கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் "..

வெள்ளி, அக்டோபர் 17, 2008

மின் வெட்டு!!

மின் வெட்டு, இப்ப தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சு தான். டீ கடைகளில் நடக்கும் அரசியல் பேச்சுகளும், வீடுகளில் நடக்கும் தொலைக்காட்சி நாடகம் பற்றிய பேச்சுகளும் இப்பொழுது குறைந்து அந்த இடத்தை மின் வெட்டு பிடித்திருக்கிறது. அந்த அளவு மின் வெட்டினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் கோலங்கள், அரசி என தொலைக்காட்சி தொடர்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்த பெண்கள் இந்த தொடர் மின் வெட்டினால் கொஞ்சம் மறந்திருக்கிறார்கள், இது ஒரு நல்ல விஷயம் தானே!

மின் வெட்டு மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் சீரியசான நிகழ்வுகளை கொஞ்சம் நக்கலோடு இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


" என்னடி எப்பவும் காலையில 7 மணிக்கு எழுந்திருக்கிற நீ இப்பல்லாம் 5 மணிக்கே எழுந்து சமையல் வேலை செய்ற, என்ன தடீர்னு அக்கறை "
" அட போங்க, எல்லாம் இந்த கரண்ட் தொல்ல தான். காலையிலே 7 மணிக்கே கரண்ட் கட்டாயிடும் அதுக்குல்ல வேலைய முடிக்கனுல்ல அதான் " ***


" என்னடி நேத்து தோசை தந்த அதுல அரிசி பாதி பாதியா இருந்திச்சு, இன்னிக்கு தோசை கொஞசம் புளிக்கிற மாதிரி இருக்கே "
" இந்த கரண்ட் எப்ப தான் போகுதுன்னு ஒரு கணக்கு இல்லீங்க அன்னிக்கு மாவு அரைக்கும் போது பாதியில போயிட்டு, நேத்து அதான் கரண்ட் போகுறதுக்குல்ல கொஞ்சம் சீக்கிரமா மாவு அரைச்சு வைச்சேன் பாருங்க புளிச்சு போச்சு. அடிக்கடி கரண்டு போகுற இந்த காலத்தில இதெல்லாம் சகஜம்ங்க " ***


" ஏம்பா கொஞ்ச நாளாவே உன்ன கவனிச்சுட்டு வாரேன் ஒழுங்கா வேலை பாக்குற நீ இப்பெல்லாம் சீட்ல இருந்தே தூங்குறியே.. "
" என்ன சார் செய்ய தினமும் ராத்திரி 10 மணிக்கு போற கரண்டு 12 மணிக்கு தான் வருது, இந்த வெயில் காலத்துல கரண்ட் இல்லாம ஒரே புழுக்கம், 12 மணிக்கு கரண்டு வந்தப்புறம் தான் தூங்க முடியுது, நான் என்ன செய்யட்டும் அதான்.. பேசாம ஆபீஸ் டயத்தை கரண்டு போற நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்துன நல்லாயிருக்கும்... " ***


" என்ன கொடுமடி இது, இவ்வளவு சங்கதி நடந்திருக்கா, மருமக ஒழுங்கா தானடி இருந்தா என்னாச்சி அவளுக்கு.. இந்த கரண்டு போற நாளுல இருந்து நாடகம் பாக்க முடியாம போச்சு.. எப்ப கரண்டு ஒழுங்கா வந்து எப்ப நானு நாடகத்தை பார்க்க.. "
" என்னடி பேசுற.. இவ்வள நேரம் நான் என் மருமகள பத்தி சொல்லிகிட்டு இருந்தா, நீ நாடகம்னு கேட்டுட்டு இருந்தியாக்கும்.." ***

" ஓயாம கரண்டு போறது ரொம்ப தொந்தரவா போச்சுங்க "
" ஏன் என்னாச்சு "
" ஓழுங்கா டீவில நாடகம் பாத்துட்டு இருந்த உங்க அம்மா, இப்ப அடிக்கடி கரண்டு போற நாளுல இருந்து, என்கிட்ட அதை இதை பேசி சண்டை செய்றாங்க..அய்யோ எப்ப கரண்டு கட் இல்லாம இருக்குமோ..." ***


" என்னடி கினத்துல தண்ணி இரைக்கிற, நேத்து தானே தண்ணி முறை அதுக்குள்ள தண்ணி காலியா? "
" நீ வேற, சும்மாவே நாலு நாளைக்கு ஒரு முறை தான் தண்ணி விடுறாங்க, இதுல வேற கரண்ட் போயிடுது, தண்ணி வர்ர நேரத்துல கரண்டு போயிட்டு தண்ணி வரல்ல. தூத்துக்குடிய மாநகராட்சியா மாத்துனாலும் மாத்துனாங்க தினம் தினம் பிரச்சணை அதிகமாயிட்டே போகுது.. என்ன செய்ய.. " ***

- மே. இசக்கிமுத்து

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008

பிள்ளையார்!!


ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
கோயில் கொண்டிருக்கிறேன்!
நகரங்களில் நாற்புற மண்டபத்தின் நடுவே!
கிராமங்களில்,
சின்ன சிலைகளாய், சிறு கற்களாய்
அரசமர அரியணையில்
மழையில் நனைந்தபடி, வெயிலில் காய்ந்தபடி!
இருந்தாலும் பரவாயில்லை
ஆத்தங்கரையோரம், அரசமரத்தடியில்
ஆனந்தமாயிருக்கிறேன்!

வடநாட்டில் இரண்டு மனைவிகளுடன்
இடிபட்டுகொண்டிருப்பதைவிட
தென்நாட்டில் சுண்டெலி துணையுடன்
தெரு முனையில் பிரம்மச்சாரியாய்
பிரவேசிக்கவே விருப்பம் எனக்கு!

தைப் பொங்கல் திருநாளில்
சாணத்திலான என்னுருவம் தான்
சகல இல்லங்களிலும் அலங்கரிக்கும்!

மூத்தவனாய் பிறந்ததினால்
முதல்வனென்று ஆனேனோ?
முக்கண்ணன் கோவிலிலும்
முதல் வணக்கம் தந்திடுவர்!

சதுர்த்தி தினமன்று
சகல ஊர்களிலும்
கொலுக்கட்டையோடு பலகாரம் பல படைத்து
கொண்டாடி மகிழ்ந்திடுவர்!
சுறுசுறுப்பாய் சுற்றோ சுற்றுவென்று சுற்றிவருவர்
சுட சுட சுண்டலை கொரித்துக்கொண்டு!
அவரவர் ஆசைப்படி அவதாரம் பல கொண்டு
ஆனந்தமாய் ஆலயத்தில் ஆசிகள் அளித்திடுவேன்!

ஆறேழு நாளில்
ஆற்றிலோ கடலிலோ கறையும் போது
சில நேரம் சிலிர்த்திருக்கிறேன்!
கடலலை மிஞ்சும் மக்கள் கூட்டத்தை கண்டு !!
இதே ஒற்றுமை மனித மனங்களில் நிலைத்திருந்தால்
மானுடம் மலையென உயர்ந்திருக்கும்!
சில நேரம் கலங்கியிருக்கிறேன்
கடலில் என்னை கரைத்துவிட்டு கரையேறும்போது கலவரமாம்!!

எண்ணற்ற வேணடுதல்கள்
என் செவியிரண்டும் நிரம்பிவிடும்!
தேர்வில் வெற்றி வேண்டி, தேர்தலில் பதவி வேண்டி,
தேடிய செல்வம் நிலைக்க வேண்டி,
வேலை வேண்டி, காரியத்தில் வெற்றி வேண்டி,
கல்யாண காலம் வேண்டி,
கவலைகள் கரைந்திட, கஷ்டங்கள் போக்கிட
எண்ணற்ற வேண்டுதல்கள் வரிசையாய் வந்து நிற்கும்!
அக்கறையாய் கேட்டிடுவேன் அமைதியுற செய்திடுவேன்!
செய்யும் செயல்களில் நம்பிக்கை வைத்தால்,
எண்ணங்கள் எல்லாம் நல்லவையென்றால்
என்றென்றும் ஆசிகள் அளித்திடுவேன்!!

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2008

அரசாங்க அடாவடிகள்!


மைசூர் விரைவு ரயிலில் தூத்துக்குடியிலிருந்து பெங்களூர் வந்திறங்கிய அம்மாவையும் அத்தையையும் அழைத்து கொண்டு படிகளில் இருந்து இறங்கி வெளியே வந்த போது, டிக்கெட் பரிசோதகருடன் அமர்ந்திருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் (RPF) ஒருவர் எங்களை அழைத்து, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ரயிலில் வந்தீர்கள் என்றேல்லாம் விசாரித்து விட்டு, அம்மா பையில் வைத்திருந்த முருங்கை காயை பார்த்து "இரண்டு முருங்கை காய் கொடு" என்றார் அதிகார தோரணையோடு. சரி இங்கே பெங்களூரில் இந்த மாதிரி நல்ல முருங்கை காய் கிடைக்காது, அதனால் எங்கள் பையில் இருந்த முருங்கை காயை பார்த்தவுடன் ஆசைப்பட்டு கேட்கிறார் என்று நினைத்து பையிலிருந்து இரண்டு காயை எடுத்து அவரிடம் கொடுத்தாள் அம்மா. அதிக அதிகாரமாய் "ரெண்டு எதுக்கு இன்னும் கொடு" என்றாரே பார்க்கலாம். வடிவேலு நிறைய படங்களில் சொல்லும் வசனம் "அட அவனா நீ " என்று நான் நினைத்துக் கொண்டு, ‍அவ்வளவு தான் இன்னும் கொடுக்க மாட்டேன் என்று அவரிடம் சொல்லிகொண்டு நடக்க தொடங்கினேன். அந்த காவலர் விடவில்லை, நில்லு நில்லு எங்கள் பின்னாலே வந்து, டிக்கெட் இருக்கா, உன்கிட்ட பிளாட்பாரம் டிக்கெட் இருக்கா என்று கேட்டுகொண்டே வர தொடங்கினார். எல்லாம் இருக்கு என்று சொல்லிவிட்டு நடக்க தொடங்கினோம். " பிளாட்பாரம் டிக்கெட் இல்லாம அடுத்தவாட்டி வா உன்ன பாத்துக்கிறேன் " என்று சொல்லி விட்டு சென்றாரே பார்க்கலாம். ஏதோ நான் பிளாட் பாரம் டிக்கெட் எடுக்காமல் அடிக்கடி வருவது மாதிரியும் அந்த காவலர் தான் என்னை அய்யோ பாவம் என்று விட்டுவிடுவது மாதிரியும் பேசிக் கொண்டு சென்றதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

இது சென்ற வாரம் நடந்த சம்பவம். எனக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் இந்த சமூகத்தை காக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த சிலர் இந்த மாதிரி நடக்கும்போது ஆத்திரம் தான் வந்தது. தட்டிப் பறிக்கும் திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது. இந்த காவலரின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது, இவர் தன் அதிகாரத்தின் மூலம் அப்பாவி பயணிகளிடம் எதை எதையெல்லாம் வாங்க முடியுமோ அதையெல்லாம் வாங்கி பழக்கப்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை பிடித்தால் அவரகளிடம் இவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. அரசாங்க சம்பளம், பல வகையான சலுகைகள் எல்லாம் இருந்தும் இவர்களின் பேராசை குறையவில்லை.

இம்மாதிரியான சுயநலவாதிகள் காவல்துறையில் இருக்கும் வரை அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் சமூக விரோத செயல்கள் செவ்வனே நடந்தேறத்தானே செய்யும்.

புதன், ஆகஸ்ட் 06, 2008

திண்ணை !!

சென்ற வாரம் சனிக்கிழமையன்று இரவு 8.30 மணியிருக்கும், சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே உள்ள சிறிய திண்ணை படியில் காற்றாட அமர்ந்திருந்தேன். அந்த சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தது. 8.30 மணிக்கே எங்கள் வரிசையில் உள்ள வீடுகளின் கதவுகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. சிறார்களின் சத்தம் அங்கில்லை. அனைவரும் வீட்டினுள்ளே இருந்துவிடுகிறார்கள். இரவு சாப்பிட்டு விட்டு திண்ணையில் காற்றாட அமர்ந்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறதே, அப்பப்பா சொல்ல முடியாது, அனுபவித்து பார்க்க வேண்டும்.


சிறு வயது நினைவலைகள் மனதில் நிழலாட தொடங்கியது. எங்கள் தெருவில் இருந்த வீடுகளெல்லாம் ஓட்டு வீடுகள் தான். எல்லா வீட்டின் முன் வாசல் அருகே திண்ணை உண்டு. வரவேற்பறை போல திண்ணையை பயன்படுத்துவதுண்டு. யாரேனும் வீட்டுக்கு வந்தால் முதலில் திண்ணையில் தான் "அப்பாட" என்று உட்கார்வார்கள். வேலை நிமித்த பேச்சாகட்டும், அரசியல் விவாதமாகட்டும், பெண்கள் சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஊர் நடப்புகளை பேசுவதாகட்டும் எல்லாவற்றிற்கும் அடைக்கலம் திண்ணை தான். எல்லாவற்றிற்கும் மேல் மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து வீட்டு பாடங்களை எழுதுவதும் பின்பு விளையாடுவதும் அந்த சுகமே தனி தான்.


சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம், எங்களின் விளையாட்டுக் களமாகவே மாறிவிடும் அந்த திண்ணை. காலை தொடங்கி இரவு வரை எங்கள் ஆட்டங்கள் அங்கே அரங்கேறும். முழு ஆண்டு தேர்வு விடுமுறை காலங்களில் இன்னும் சொல்லவே வேண்டாம். விளையாட்டுகள் பல பல, வீடு கட்டுவது, இலைகள் செடிகளை பறித்து வந்து சோறு சமைப்பது, களி மண்னால் சாமி செய்து அதற்கு கொடை விழா நடத்துவது, தாயம், பல்லாங்குழி, ஐஸ்பால், கல்லா மண்ணா என விளையாட்டுகள் வித விதமாய் அரங்கேறும். சில சமயம் பெற்றோர்களுக்கு எங்கள் திண்ணை விளையாட்டுகள் பெரும் தொல்லையாக மாறுவதும் உண்டு. சில நேரம் எங்களின் தொல்லைகள் எல்லை மீறும் போது அம்மாவிடம் திட்டுகளும் வாங்குவதுண்டு. அதற்கு மறுநாளே விளையாட்டு இடம் நண்பன் வீட்டு திண்ணைக்கு மாறியிருக்கும். குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுவது போல எங்களின் விளையாட்டு இடமும் திண்ணை திண்ணையாக மாறி கொண்டே இருக்கும். இரவு சாப்பாடு கண்டிப்பாக திண்ணையில் வைத்து தான். பக்கத்து வீட்டு நண்பர்களோடு சேர்நது கூட்டாஞ்சோறு சாப்பிடுவது. வித விதமான கதைகள் சொல்லி மகிழ்வது, திண்ணையோடு மகிழந்த நாட்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.


கால மாற்றத்தில், தற்பொழுது கட்டப்படுகின்ற அனேக வீடுகளில் திண்ணை இருப்பதில்லை. நிலத்தில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும், அதில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விடுகிறார்கள், குழந்தைகளின் விளையாட்டு இடம் பற்றி கவலை கொள்வதற்கு அவர்களுக்கு நேரமில்லை. தற்கால சிறுவர்களின் முக்கிய விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதை நாம் ஆங்காங்கே தெருக்களில் காணலாம். சில சிறுவர்களின் மாலை நேர விளையாட்டாக சைக்கிள் ஓட்டுல். மேலும் சிறுவர்களின் நட்பு வட்டம் பள்ளி தோழர்களை விட்டு விரிவடைய மறுக்கின்ற சூழ்நிலையில் தான் தற்பொழுது இருக்கின்றது. விசாலமாக சிந்திக்கும் மனநிலை வீட்டுக்குள்ளே மறைந்துவிடுது. இதெல்லாம் அவசரயுகத்தின் அலங்கோலங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது !!

வெள்ளி, ஜூன் 20, 2008

தேள் கடி !!


து 2001ன் மே மாதத்தில் நடந்த சம்பவம். அன்று இரவு சுமார் 2 மணி இருக்கும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு வலது காலின் பாதத்திற்கு சற்று மேலே ஏதோ ஒன்று கடித்தது போல இருந்தது. என்னவென்று எழுந்து பார்ப்பதற்குள் வலி விறுவிறுவென்று அதிகரிக்க தொடங்கியது. லைட்டை போட்டுவிட்டு அம்மாவிடம் "அம்மா என்னமோ காலுல கடிச்சுட்டுது, வலி தாங்க முடியல" ஏதேனும் கட்டறும்பு கடித்திருக்கும் என்று தான் முதலில் நினைத்தேன், ஆனால் நிமிடங்கள் நகர நகர வலி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இது நாள் வரை இந்த மாதிரியான வலியை நான் அனுபவித்ததில்லை. நிச்சயமாக கட்டறும்பு கடிக்கவில்லை, வேறு ஏதோ ஒன்று...என்ன அது, அம்மாவும் தம்பியும் சுவரின் ஓரமாக ஏதேனும் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். வலி ஒரு பக்கம், இன்னொரு பக்கம் என்ன கடித்ததென்று தெரியவில்லை, அந்த பயம் வேறு தொற்றிக் கொள்ள என்னால் இருக்க முடியவில்லை, வலிக்கின்ற இடத்திற்கு சற்று மேலே ஒரு துணியை வைத்து கட்டிக்கொண்டேன்.


கடைசியாக நான் படுத்திருந்த பாயை எடுத்து உதறிய போது, ஒரு தேள் ஓடிச் சென்று சுவரின் மூலையில் ஓரமாக ஒதுங்கி நின்றது. விரைவாக வாசலருகே இருந்த செருப்பை எடுத்து வந்து அதை அடி அடியென்று அடித்து கொன்று போட்டேன். எங்கள் வீட்டில் இந்த சத்தம் கேட்டு காம்பவுண்டில் இருந்தவர்கள் " என்ன அது, என்ன " என்று எங்கள் வீட்டில் கூடிவிட்டனர். அதற்குள் அம்மா, எதிர் வீட்டில் இருக்கும் ரெங்கம்மாள் அத்தையை கூட்டி வந்துவிட்டாள். ரெங்கம்மாள் அத்தை பூச்சி கடிக்கு பார்வை பார்ப்பார்கள். மரத்தில் இருந்து வேப்பிலையை கொஞ்சம் பறித்து வந்து திருநீர் பூசி தேள் கடித்த இடத்தில் ஏதோ முனுமுனுத்துக்கொண்டே வேப்பிலை வைத்து தடவிவிட்டார்கள். பிறகு விஷம் ஏதும் ஏறியிருந்தால் அதை கட்டுப்படுத்த வெற்றிலையும் மிளகும் சேர்த்து வாயில் போட்டு சவைத்து விழுங்கிவிட சொன்னார்கள். அப்படியே செய்தேன். "வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதே " என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வலி. குறைந்த மாதிரி தெரியவில்லை. " அம்மா வலி தாங்க முடியல" என்று முனங்கிக் கொண்டிருக்கையில்..

அம்மாவோ " எங்கள் ஊரில் தேள் கடித்துவிட்டால் அந்த தேளை ஒரு நூலில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டால் விஷம் படிப்படியாக இறங்கிவிடும் என்று சொல்வாங்க" என்றாள்.

பக்கத்து வீட்டு அக்காவோ " வலி தாங்க முடியவில்லலையென்றால் கடித்த தேளை தீயில் சுட்டு அந்த சாம்பலை கடித்த இடத்தில் தேய்த்தால் வலி குறையும் " என்று சொன்னாள்.

"தேள் கடி வலியை தாங்க முடியாது, வலி தெரியாமல் இருக்க கொஞ்சம் சாராயம் கொடுப்பாங்க" இது மற்றொருவர்.

" நல்ல வேளை இது வெள்ளை தேள், இதுக்கு விஷம் கொஞ்சம் தான், ஆனா கருந்தேள் கடித்தால் பயங்கர விஷம் ஆளையே கொன்னுடும் " இது இன்னொருவர். இங்கே ஒருவன் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருக்க, ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லிவிட்டு அவரவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். சரி இந்த ராத்திரியில ஆஸ்பத்திரிக்கும் போக முடியாது, காலையில ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, தேள் கடித்த இடத்தில் பொடி வெங்கயத்தை நறுக்கி தேய்த்துகொண்டேன். ‍நேரம் ஆக ஆக வலி குறைந்த மாதிரி தெரிய எப்போது தூங்கினேன் என்று எனக்கே ‍தெரியவில்லை. காலையில் எழுந்த போது வலி பாதியாக குறைந்திருந்தது. இரவில் வலியால் துடித்துகொண்டிருந்த போது பக்கத்து வீட்டார்கள் சொன்ன யோசனைகளை நினைத்து சிரிப்பு தான் வந்தது, கூடவே BSc முதலாம் ஆண்டில் படித்த NISSIM EZAKIEL லின் " NIGHT OF THE SCORPION " என்ற பிரபலமான ஆங்கில கவிதை நினைவுக்கு வந்தது.

இச்சம்பவத்தை இன்று நினைத்தால் கூட சிரிப்பு வந்துவிடுகிறது!!!

செவ்வாய், ஜூன் 03, 2008

நல்ல உள்ளங்கள் !!


சென்ற ஞாயிற்றுகிழமை (01.06.2008) பெங்களூர் மேனிலை பள்ளியில் ESI நடத்திய மேனேஜர் பதவிகளுக்கான தேர்வு எழுத சென்றிருந்தேன். தேர்வு மேற்பார்வையாளர் அறையினுள் வந்த உடனேயே தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டார். தான் 1995 ம் ஆண்டின் UPSC தேர்வில் தேர்வானவர் என்றும், தற்பொழுது ESIயில் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். பின்பு எங்களிடம் ஒரு சின்ன அறிவுரை, கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளியுங்கள், முதலில் தெரிந்த கேள்விகளுக்கு விடையளியுங்கள், தெரியாத கேள்விகளில் நேரத்தை செலவழிக்காதீர்கள் என்று கூறிவிட்டு ‍" Best of Luck" என்று வாழ்த்தும் தெரிவித்துக்கொண்டார். ஒரு வித்தியாசமானவரை சந்தித்ததில் பூரித்துவிட்டேன். நானும் நிறைய தேர்வுகள் எழுதியிருக்கிறேன், ஆனால் தேர்வு மேற்பார்வையாளர்கள் வந்தவுடன் சத்தம் போடாதீர்கள், மொபைல் போனை ஆப் செய்துவிடுங்கள், மனி அடித்த உடன் மட்டும் தான் கேள்வி தாளை பிரிக்க வேண்டும் என்று விதிமுறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்து விடுவார்கள். இவர்களின் நடுவே ‍தேர்வு எழுதுபவர்களுக்கு பயனுள்ள வகையில் கடைசி நேர அறிவுரைகள் வழங்கிய அந்த மனிதரை சந்தித்ததில் உண்மையிலேயே பூரிப்படைந்தவனாய் அன்று தேர்வு எழுதினேன் ஆனால் அவரின் பெயரை மட்டும் என்னால் ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை...

அன்றாட வாழ்க்கையில் இது போல நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேரிடும். சந்திப்பின்போது பல விஷயங்கள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு கூட அந்த சந்திப்பு வழி வகுத்திருக்கலாம். பலதரப்பட்ட மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள், அவர்களை எதற்குதான் சந்தித்தோம் என்று தோன்றும், அந்த சந்திப்பை, பேசிய விஷயங்களை நாம் உடனே மறந்திடுவோம். இங்கே நான் அதை பற்றி பேச வரவில்லை.

சில பேர் இருக்கிறார்கள், ரயில் அல்லது பேரூந்து பயணத்தின்‍ போது அப்பொழுதுதான் சந்தித்திருப்போம் ஆனால் வலவலவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்களை பற்றி, பல சம்பவங்களை பற்றி நிறைய பேசுவார்கள், சில சமயம் நமக்கு எரிச்சல்கூட வந்திருக்கும். அவர்களை பற்றி தற்பெருமை பேசி கொள்கிறார்கள் என்று நாம் அவர்களின் பேச்சை காதில் வாங்காது வேறு வழியின்றி இருந்திருப்போம் அல்லது வேறு எதை பற்றியோ நாம் சிந்தித்து கொண்டிருப்போம். . அவர்கள் தம்மை பற்றி தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள் என்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுவதால் அவர்கள் பேசுவதை காதில் வாங்காது இருந்துவிடுகிறோம். ஆனால் இது மாதிரியான சமயங்களில் சில நல்ல விஷயங்கள், சுவாரசியமான செய்திகள் நமக்கு கிடைக்கலாம்...

வியாழன், மார்ச் 06, 2008

பள்ளி நாட்களில் - 2

ரம்ப பள்ளி நாட்களில் நடந்த சம்பவங்கள் பல என் ஞாபகத்தில் இருந்ததில்லை ஒன்றை தவிர. நான் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை தூத்துக்குடி மாசில்லாமனிபுரத்தில் உள்ள செயின்ட் சார்லஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொடங்கினேன். எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி நாட்கள் இந்கு தான் சந்தோஷமாக கடந்தது.



அப்பொழுது நான்காம் வகுப்பு படித்துகொண்டிருந்ததாக ஞாபகம். வகுப்பில் பையன்கள் இரண்டு பிரிவாக தான் இருப்போம். சீலன் கூட கொஞ்சம் பேர், மோகன கண்ணன் கூட கொஞ்சம் பேர். விளையாட்டு ஆனாலும் சண்டை ஆனாலும் இந்த இரண்டு பிரிவினர்களிடையே தான் போட்டி இருக்கும். இவர்களிருவர்களின் சண்டைகளை தடுத்து தன்டனை கொடுப்பதே எங்கள் மிஸ்ஸின் முக்கிய வேலையாக இருக்கும். எனது நண்பர்களான பிரவீனும் ஜவகரும் மோகன கண்ணனுடன்‍ சேர்ந்து இருந்ததனால் நானும் அந்த செட்டில் சேர்ந்து இருந்தேன்.



‍ ஒருநாள் மதியம் சாப்பிட்டுவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்து கொண்டு சினிமா கதை பேசிகொண்டிருந்தபோது சீலனுடன் இருக்கும் பிரபாகர் " ரஜினி மெ*** தெரியுமா" என்று ஏதோ சொல்ல, எப்போதும் அமைதியாக இருக்கும் நான் அன்று " கமல் அ* ‍தெரியுமா" என்று சொல்ல அந்த வழியாக வந்த எங்கள் மிஸ் இதை கேட்டுவிட, எங்களிருவருக்கும் நிறைய திட்டு. எங்களுடைய மிஸ் இந்த சம்பவத்தை 5ம் வகுப்பு மிஸ்ஸிடம் சொல்ல, அன்று மாலை அசம்பளி முடிந்தவுடன் 5ம் வகுப்பு மிஸ் என்னிடம் வந்து " கமல் அ** ?, உனக்கு கொழுப்பு ரெம்ப" என்று திட்டி விட, என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றதை இப்பொழுது நினைத்து பார்த்தாலும் சிரிப்பாக தான் வருகிறது. எதுவும் அறியாத பருவம் அது. பள்ளி விட்டு செல்லும் வழிகளில் சினிமா நடிகர்களின் போஸ்டர்களின் மேல் இது மாதிரியான வாசகங்களை காணலாம், இதன் பாதிப்பால் தான் நான் அந்த மாதிரியான வார்த்தைகளை அர்த்தம் தெரியாமல் ‍பேசியிருக்க வேண்டும். மற்றுமொரு செய்தியையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும். அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். 5ம் வகுப்பு மிஸ் என்னை கோபத்தோடு திட்டியதை நினைக்கும் போது சிரிப்போடு சேர்ந்து " சகலகலா வல்லவன்" திரைபடத்தில் வரும் "இளமை இதோ இதோ.. " என்ற புத்தாண்டு படல் தான் நினைவுக்கு வருகிறது. (தொடரும்..)

வெள்ளி, பிப்ரவரி 29, 2008

பள்ளி நாட்களில் - 1

ள்ளி பருவம் துள்ளல்கள் நிறைந்த பருவம். கவலைகள் மனதில் ஏதுமின்றி கவிதை வரிகளாய் அங்குமிங்கும் அழகாய் தெரியும் விபரம் அறியாத சிறுவயதில் வீட்டை நினைத்து பள்ளிக்கு செல்வதை பயமாய் பார்த்திருப்போம். வளர வளர பள்ளி வாழ்க்கை இனியதாய் அமைந்துவிடும். வார இறுதி நாட்கள் கூட ஆசிரியர் இல்லாமல் அசைய மறுத்துவிடும், பள்ளி நண்பர்கள் இல்லாமல் நீண்டு நின்றுவிடும். பள்ளி பருவம் கடந்து பல வருடங்கள் சென்றாலும் நினைத்த நேரத்தில் பள்ளி நினைவுகள் மனமெங்கும் பசுமையாய் படர்ந்துவிடும். பாடம் படித்த வகுப்பறைகள், ஓடி களைத்த விளையாட்டுத் திடல், வேப்பமரத்தடி பாடங்கள், உண்டு களித்த மதிய வேளை, கைகோர்த்த நண்பர்கள், அரவணைத்த/அடி‍‍கொடுத்த ஆசிரியர்கள் அத்தனைபேரும் அருகிலிருப்பதாய் ஆனந்தித்திடுவோம்.
அடிக்கடி நம் மனம் பள்ளி நாட்களை அசைபோட்டாலும், இயந்திரமாய் இயங்கும் இந்த அவசர காலத்தில் அந்த பசுமை நினைவுகளில் சில மறந்து போய்விடுமோ என்ற உணர்வு என்னுள் பலவேளை எழுவதுண்டு. அதனால் தான் என்னுடைய மனக்கடலில் எழும் நினைவலைகளை வலைதளத்தில் பதிவு செய்ய தீர்மானித்து இந்த அறிமுக பதிவோடு தொடரயிருக்கிறேன். என்னுள் எழும் நினைவலைகள் உங்களையும் உங்கள் பள்ளி நாட்களுக்கு ‍அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன்..(தொடரும்..)