புதன், டிசம்பர் 31, 2008

புதிதாய் வாழ்ந்திடுவோம் !!

தோ இன்னுமொரு ஆண்டு
இப்போதும் நமக்காக,
இயற்கையை நேசித்திட
இன்னல்கள் தவிர்த்திட!

இயற்கையை நேசித்தால்,
பருவம் தப்பிய மழையுமில்லை
பாரினில் எங்கும் வெள்ளமில்லை!

பேரலை பீதியும்
பெருந்துயர் இன்னலும்
வரும் நாளில் வருவதில்லை!
இயற்கையோடு இணைந்த வாழ்வு
இறைவனோடு வாழும் வாழ்வு!

உலக மாந்தரெல்லாம்
உற்றோராய் உறவு கொள்வோம்!
மானுடம் மாண்புற
மனித நேயம் காத்திடுவோம்
பின்பு ஏதிந்த
தீவிரவாதமும் தீராத சண்டையும்!

நடந்தவையெல்லாம் பழங்கதை
நாளையே முளையட்டும் புது விதை!
புதிய சிந்தனை வந்ததுமே
புவியினில் நிலைத்திடும் ஆனந்தமே!

இயற்கையை காத்திடுவோம்
மனிதநேயம் வளர்த்திடுவோம்
புத்தாண்டில் புதிதாய் வாழ்ந்திடுவோம்!!

- மே.இசக்கிமுத்து

திங்கள், டிசம்பர் 29, 2008

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
தன்னை போல் பிறரை கருதும்
தன்னலம் மறந்த மனிதர்கள்!
அருகிலிருப்பவன் அவதிபட்டால்
அனலாய் துடிக்கும் அன்புள்ளங்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
ஏ‍ழை பணக்கார ஏற்றத் தாழ்வுகள் என்றுமில்லை!
சக மனிதர்களையும் சகோதரர்களாய்
எண்னும் இவர்கள் சிந்தனையில்
பகலவன் பார்த்த பனிதுளி போல்
சாதியும் மதமும் துளியுமில்லை!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
கருவிலிருப்பது பெண்ணென தெரிந்தும்
பெருமை பேசி பேரானந்தங்கொள்ளும்
பெற்றோர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
தொழிற்சாலைகளிலும் தெருவோரங்களிலும்
துவண்டு கிடந்த பிஞ்சு உள்ளங்கள்
சிறகு முளைத்த சிட்டுக் குருவிகளாய்
துள்ளி திரியும் இளங்கன்றுகளாய்
கல்விசாலையில்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
வேலையற்று சுற்றி திரிந்த
சோம்பேறி கூட்டமும்
எப்போதும் கத்தியும் கம்புமாய்
காட்சி தந்த அடாவடி கூட்டமும்
மண்வெட்டியும் கையுமாய்
அவரவர் வேலைக்கு அதிகாலையில்
எழுந்து செல்லும் அற்புத காட்சி!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மேகங்களுக்கிடையே
முளைத்து நிற்கும் வெள்ளிகளாய்
பச்சையுடுத்திய நேற்வயல்களுடே
நிதர்சனமாய் இளைஞர்கள்!
விவசாய விஷயங்களை வீட்டிற்கு மட்டுமல்ல
இணையத்தின் மூலம்
இவ்வுலகத்திற்கே சொல்லி
புது புரட்சி கண்டவர்களாய்
இந்திய இளைஞர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
நாட்டில் பட்டம் வாங்கி
அரசாங்க ஆணைக்காக காத்திராமல்
ஆளுக்கொரு தொழிலை
அக்கறையாய் உருவாக்கி
ஆர்வமுடன் உழைக்கும் இளைஞர்கள்!
இங்கே இளைஞர்கள்
வேலையில்லா பிரச்சனைக்கு விலங்கிட்டவர்கள்!
தீவிரவாதத்திற்கு தீயிட்டவர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
அனுசக்தியை ஆக்க வழியில் பயன்படுத்தும்
அற்புத வழிகளை ஆராய்நது
அகிலத்திற்கு சொல்லிடும் விஞ்ஞானிகளாய்
இந்திய இளைஞர்கள்!
விண்வெளி விஞ்ஞானத்திலும்
கணினி கலையிலும் இந்திய இளைஞர்களால்
உலக விஞ்ஞானிகளின் முழு கவனமும்
இந்தியாவின் பக்கமே!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மனமிருந்தால் போதும்
மதமும் சாதியும் தேவையில்லை!
கருத்‍தொன்றினால் போதும்
காலங்காலமாய் காதலை வாழ வைக்க
காதலுக்கு காவலாய் நாங்களுள்ளோம்
இது காதலர்களின் பெற்றோர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
வஞசமில்லா உள்ளமும்
வளமான எண்ணமும் தான் வாழ்க்கைக்கு தேவை,
வரதட்சணையல்ல!
பெண்களுக்கு வாழ்வளிக்க நாங்களுள்ளோம்
இனி வாழாவெட்டி பட்டமுமில்லை
முதிர் கன்னி முத்திரையுமில்லை
முழங்கும் இளைஞர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மகத்தான வாழ்வை
மரண பாதைக்கு விரைந்து மாற்றிடும்
மயக்கும் போதையை மறந்தும் கூட
நினைப்பதில்லை இந்த மனிதர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
உள்ளத்தில் கள்ளமில்லை
ஒழுக்கத்தில் குறையுமில்லை
கீழ்மட்ட எண்ணமும் எங்களுக்கில்லை
எயிட்சுக்கு இனி வழியுமில்லை!
மகிழ்வுடன் மார்தட்டும் மனிதர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
அர்த்தமற்ற அறிக்கைகளும்
மக்கள் அமைதியை கெடுக்கும்
அரசியல் கலவரமும் அராஜக அலுவல்களும்
அடியோடில்லை!
இங்கே கூட்டணி பல அமைத்தாலும்
கூட்டங்கள் பல நடந்தாலும்
மக்கள் நலனே மனதில் ‍கொள்ளும்
மகத்தான அரசியல் தலைவர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
ஆண்டுக்கொருமுறை வந்து போகும்
தீபாவளி பொங்கலல்ல தேர்தல்!
ஐந்தாண்டுக்கொருமுறை மலரும்
மகரந்த பூக்களாய் மக்கள் உரிமைக்கு
உயிர் கொடுக்கும் ஊக்க சக்தியாய் தேர்தல்!!

இங்கே தேர்தலுக்கு பின்
வாக்குறுதிகளையும் வட்டத்தையும் மறவாமல்
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய
நிதமும் போட்டியிடும் அரசியல்வாதிகள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
அன்பளிப்பென்று அர்த்தம்பாவித்து
லட்சமாய் கொடுக்கும் லஞ்சம்
அரசு அலுவலர்களின் லட்சிய கடமையில்
அரசியல் தலைவர்களின்
மக்கள் நல கொள்‍கையில்
மாயமென மறைந்து போயின!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
காஷ்மீர் மலைப்பகுதி
காதலர்களுக்கு கூடி மகிழும்
கவின்மிகு சோலை!
புதுமண தம்பதிகளுக்கு
தேனிலவு சொர்க்கம்!
இங்கே,
அந்நிய ஊடுறுவலும்
ஆயுத முழக்கங்களும் அறவேயில்லை!!

அந்நிய தேசங்கள்
அதிசயத்து நோக்கும்
இந்திய திருநாட்டை
நினைத்து பார்க்கையில்
நெஞ்சில் குற்றால அருவியாய்
சந்தோஷ சாரல்கள்!!

தாய் மண்ணே வணக்கம்!
தவறி விழுந்தேன் தரையினில்!
அடடா அதிகாலை கனவு!
அதிகாலை கனவு அப்படியே பலிக்குமாம்
அம்மா சொல்லக் கேள்வி!!

தரையில் விழுந்த என்னை
வரவேற்றுக் கொண்டது நண்பனின் வாழ்த்து மடல்!

" எண்ணங்கள் ஈடேற
கனவுகள் உயிர்பெற
கனிவான வாழ்த்துகள் "

என் கனவுகள் உயிர்பெறுமா?
சமத்துவம் காக்க
சரித்திரம் படைக்க
இருக்கிறோம் நாங்களென்று
இளைஞர்கள் இருக்கையில்
வேறென்ன வேண்டுமிங்கு!
நிச்சயம் ஒரு நாள்
என் கனவுகள் உயிர் பெறத்தான் போகிறது
என் உள் மனமும் சொன்னது!!
இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!!

- மே. இசக்கிமுத்து


குறிப்பு:- நான் எழுதிய இந்த கவிதை, M/S.FLY JAC LOGISTICS ன் பத்திரிகையான " JAGRATHA"வில் ஜனவரி 2000 இதழில் வெளியானது (நான் அப்பபொழுது அந்நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிகொண்டிருந்தேன்).

பிறகு 14.08.2001 அன்று பகல் 12.00 மணி அளவில் திருநெல்வேலி வானொலி நிலைய ஒலிப்பதிவு கூடத்தில் எனது குரலிலேயே ஒலிப்பதிவு செய்யப்பட்டு, 29.08.2001 அன்று காலை 9.45 மணிக்கு ஒலிப்பரப்பான " இளைய பாரதம் " நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பான எனது இரண்டாவது கவிதை இது!!

புதன், டிசம்பர் 24, 2008

கடை தேங்காய்...


ஹோட்டல் வி.டீ பேரடைசில் 17.12.2008 முதல் 19.12.2008 வரை பார்ஸன் இண்ஸ்டிடியுட் ஆப் ஸ்டாட்யூடரி ரூல்ஸ் (PARSAM INSTITUTE OF STATUTARY RULES, BANGALORE) நடத்திய அரசு அலுவலர்களுக்கான " ACCOUNTING STANDARDS AND READING BALANCE SHEET " என்ற பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்காக எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னை அனுப்பியிருந்தார்கள். நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்வதால் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கலந்து கொண்டேன்.

பயிலரங்கின் முதலாம் நாள் முடிவிலே எனக்கு புரிந்து விட்டது, இது அரசு R&D NON PROFITABLE ORGANISATION னில் பணி புரியும் என்னை போன்றோர்க்கு எந்த பயனுமில்லை, ஏனென்றால் பயிலரங்கில் சொல்லி தந்ததோ லாபம் ஈட்டும் கம்பெனிகளில் பணி புரிபவர்கள் தெரிந்து கொள்ள, கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள், அரசு R&D NON PROFITABLE ORGANISATIONனுக்கு அது பொருந்தாது. ஐயோ தேவையில்லாமல் என்னையும் அனுப்பி பயிலரங்க கட்டணமாக ரூ. 6180/- வேறு கொடுத்துவிட்டார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அங்கு மற்றொரு விஷயத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம் இது தான்.

இந்த பயிலரங்கில் பெங்களூரில் உள்ள மற்றொரு அரசு R&D NON PROFITABLE ORGANISATION ஆன ADA (AERONAUTICAL DEVELOPMENT AGENCY) வில் இருந்து 10 பேர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசும் போது தான் தெரிந்தது அந்த 10 பேரில் 5 பேர் தொழில்நுட்ப பிரிவில் (SCIENTIFIC & TECHNICAL STAFF) உள்ளவர்கள் என்று. நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்யும் எங்களுக்கே இப்பயிலரங்கம் பயனற்று இருக்கும் போது தொழில்நுட்ப பிரிவில் உள்ளவர்களை அவர்களுடைய நிறுவனம் எப்படி அனுப்பியது? பிறகு தான் புரிந்தது ADAவில் நிதி மற்றும் கணக்கியல் அதிகாரியாக இருக்கும் திரு.நாகராஜா என்பவர் இப்பயிலரங்கை நடத்தும் பார்ஸன் இண்ஸ்டிடியுடிற்கு மிகவும் நெருக்கமானவர், மேலும் இந்நிறுவனம் நடத்தும் எல்லா பயிலரங்கிற்கும் இவர் தான் ஒருங்கிணைப்பாளர். எனவே தான் அவருடைய அலுவலகத்தில் இருந்து அதிகமான நபர்களை தேர்வு செய்து அனுப்ப முடிந்தது. மேலும் திரு.நாகராஜாவிற்கு பல அரசு நிறுவனங்களிலுள்ள உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம். இந்த நெருக்கத்தினால் பார்ஸன் இண்ஸ்டிடியுட் நடத்தும் பயிலரங்குகளில் நிறைய பேரை பங்கு கொள்ள செய்ய முடிகிறது. அதில் ஒன்று தான் எங்கள் நிறுவனம் இந்த பயிலரங்கிற்கு என்னை அனுப்பியது. அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக எங்கள் துறை தலைவரை சந்தித்து இந்த பயிலரங்கத்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியபோது அவர் " மற்ற ACCOUNTING STANDARD பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் அனுப்பினேன் " என்றவாறு சமாளித்துக் கொண்டார்.

அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்காக செலவு செய்யும் போது அதில் ஏதேனும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும். பயன் இல்லை என்று தெரிந்தால் அந்த செலவை குறைத்து கொள்ளலாம். இதனால் நேரத்தையும் அந்த பணத்தையும் பயனுள்ள விதத்தில் செலவிடலாம்.

இது போன்ற வீண் செலவினங்கள் நிறைய அரசு அலுவலகங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை குறைக்க வேண்டும் என கூறி அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறது. மறு புறம் பல அரசு அலுவலகங்களில் தேவையற்ற செலவினங்கள் தான் அதிகமாக இருக்கிறது. என்ன சொல்வது. நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்களே " கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் "..