வெள்ளி, டிசம்பர் 01, 2023

மழையென மாயம் !!


 ன்றாய் இரண்டாய்
ஒவ்வொரு துளியாய்
பூமியை தழுவிடும் மழைத் துளி!
புது மழையின் மண் வாசம்
புத்துணர்வாய் ஒரு பரவசம்!

குடை பிடித்து நடக்கும் போதும்
கொஞ்சம் நனைந்திடவே மனந்துடிக்கும்!
குளமென தேங்கும் நீரில்
கும்மாளமிட ஓடிடும் கால்கள்!
அங்குமிங்கும் பார்த்துவிட்டு
ஆசையாய் கால் நனைத்திட
ஆவலும் வந்திடுமே!

வருடம் முழுவதும்
வறண்டிருந்த வரப்போரம்
முதல் மழையின் மோகத்தில்
முகங்காட்டும் புது புற்களாய்,
மழைக்கால நினைவுகளெல்லாம் 
மனதை கொஞ்சம் வருடிச் செல்லும்!

துவளச் செய்திடும் துயரங்களை,
கலங்கச் செய்திடும் கவலைகளை,
மழையென மாயம்
மறக்கச் செய்திடும்!
மழலையாய் மகிழ்ச்சியில்
மனம் துள்ளிக் குதித்திடும்!!

                       - மே. இசக்கிமுத்து

வியாழன், நவம்பர் 09, 2023

ஒரு தோழியின் தேடல்!!




டிக்கடி பார்த்த முகமாய் இருந்த நீ
அறிமுகம் ஆனபோது சிரித்த முகமானாய்!
நட்பெனும் வானில் நகர்வலம் வரும்
நிலவு தோழன் நீ!

கண்ணியமான நட்பிது தான் 
காமம் இல்லா உறவிது தான் !
காணத் துடிக்கும் போது,
காதலின் வலி கொடுத்தாய்!
காணும் போது கண்ணால் பேசி
கலவரம் செய்தாய்!
நீ பேசா நாட்களில்
இரவுகளை நீளச் செய்தாய்!
நினைவுகளில் மூழ்கச் செய்தாய்!

அடுக்கடுக்காய் பேசும்போது
அக்கறையாய் கேட்டுக் கொண்டாய்!
மனக்குழப்பம் மறக்கச் செய்தாய்
மனங் குளிர மாயம் செய்தாய்!
வார்த்தைகளற்று நிற்கும் போது,
வாஞ்சையோடு புன்னகை செய்தாய்!

மணிக்கணக்கில் பேசும்போது
மனதில் மலரும் மகிழ்ச்சி!
சொல்ல மறந்ததையெல்லாம்
செல்பேசியில் பகிர்ந்து கொண்டோம்!

மௌனத்தை மொழி பெயர்த்தாய்,
மெல்லிசையாய் தலையசைத்தாய்!
என் குரலில் மயக்கம் என்றாய்,
ஜில்லென்று கிறங்கச் செய்தாய்!
பொக்கிஷம் நீ என்றேன்
பொத்தி வைத்துக்கொள் என்றாய்!

தாகத்தின் போது தண்ணீரானாய்,
துன்பத்தின் போது கண்ணீரானாய்!
தவித்திடும் போது தாயின் மடியானாய்!
துவண்டிடும் போது 
தந்தையாய் தைரியம் தந்தாய்!

குழம்பிய மனதிற்கு
குறி சொல்லி தெளிய வைத்து,
சரியென பட்டதை சட்டென சொல்லிடுவாய்,
தவறென தெரிந்ததை,
தக்க சமயத்தில் உணர்த்திடுவாய்!

எங்கே நீ இருக்கின்றாயோ,
என்னை நீ நினைக்கின்றாயோ!
நிழலென உன் நினைவுகள்,
நிதமும் என்னை தொடர்கிறதே!

இருக்குமிடம் தூரமங்கே,
இரவெல்லாம் பாரமிங்கே!
தொலைத்து விடவில்லை,
தொலைவில் தான் இருக்கின்றாய்!
இருப்பிடம் தெரிந்தாலும்,
இங்கே நான் தேடுகின்றேன்!

- மே. இசக்கிமுத்து

திங்கள், ஆகஸ்ட் 07, 2023

கல்லூரி காலங்கள் !!



 (நான் படித்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், 06/8/2023 அன்று எங்கள் B.Sc இயற்பியல் (1994-97) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் வெள்ளி விழா சந்திப்பின் போது நான் எழுதி, வாசித்த கவிதை)



கால் நூற்றாண்டு கடந்து  நம்
கல்லூரியில் சந்திக்கின்றோம் !
நாம் பழகிய நாட்களும்,
மாறாத நட்பும்,
மறவாத நினைவுகளும்,  
புவியீர்ப்பு விசையாய் நம்மையெல்லாம்
இங்கு ஈர்த்து வந்தது !
எல்லாவற்றிற்கும் மேலாக,
புவியீர்ப்பு மையமாய்
பெருமை கொண்ட நம் கல்லூரி !!

இன்று கல்லூரி படிக்கட்டுகளில்
நாம் முன்னோக்கி நடந்தபோது,
பின்னோக்கி சென்றதே 
நம் நினைவுகளெல்லாம் !!

நந்தவனமாம் நம் கல்லூரியில்
நாளும் மலர்ந்திடும்
நறுமண மலர்களாய்
நடைபோட்ட நாட்கள் !!

முதல் வருடம்,
 முன்பின் தெரியாத முகங்கள்
முரன்கள் சில வந்த போதும்,
நாட்கள் செல்ல செல்ல
நம்பிக்கையும் மலர்ந்ததனால் 
நண்பர்கள் ஆனோம் நாம் !!
மூன்றாம் வருட முடிவில்
முழுவதுமாய் பக்குவப்பட்டோம்!!

இருபாலர் வகுப்புகளின்
இனிதான தொடக்கம் நாம் !
ஏனைய மாணவர்களின் ஏக்கப் பார்வை 
எப்போதும் நம் மீது தான்!
ஆணும் பெண்ணும் சமமென
அன்போடு அமர்க்களம் செய்தோம் !
இயற்பியல் துறை நாமென்று
இனிதாய் பெருமை கொண்டோம் !!

வகுப்பில்லா நேரங்களில்
வாவென்று அழைத்திடுமே
வகுப்பறையின் பின்புறமுள்ள வேப்பமரம் !
வாஞ்சையோடு அதன் நிழலில்
பாடங்களை பகிர்ந்து கொண்டோம் !
சுற்றுலா விவாதங்களும்
அதற்கான பாடல்களின் தேடல்களில்
கேலிகள் பல செய்து - பொய்
கோபம் கொண்டு கலைந்திடுவோம்!!

நாமில்லா நேரங்களில்,
நாம் பயின்ற பாடங்களோடு
பாடல் வரிகளையும் பாடிக்கொண்டு
ஆடிக் காற்றில் இசைந்தாடி
அங்குமிங்கும் நம்மையெல்லாம் 
நாளும் தேடியிருக்கும்
நிழல் தந்த வேப்பமரம் !!

கல்வியோடு நம் கனவுகளையும்
கண்முன்னே நிறுத்தி,
கற்றுணர்ந்த சான்றோராய்
நம்மையெல்லாம் மாற்றிய
நல்மனங் கொண்ட பேராசிரியர்கள் !!

நாம் தயங்கிய போதெல்லாம்,
நம்பிக்கை விதைகளை
நம் மனதினில் தூவி,
தந்தைக்கு நிகராய்
தன்னம்பிக்கை தந்த பேராசிரியர்கள் !!

நம்பிக்கை வைத்து
நண்பர்கள் போல் 
அனைவரின் கருத்திற்கும் 
பேராசிரியர்கள் ஆமோதிக்கும் போதெல்லாம்
ஆனந்தமாய் வருமந்த ஆரவாரம் !!

அழகிய நாட்களின் நினைவலைகள்
அவ்வப்போது ஆசையாய்
ஆழ்மனதை வருடிச்செல்லும் போதெல்லாம்,
அம்மாவின் தாலாட்டில்,
அப்பாவின் பேரன்பில்,
சத்தமின்றி சிரித்து மகிழும்
சிறுபிள்ளை ஆனோம் நாம் !!

நாம் பயின்ற வகுப்பறையில் 
மீண்டும் நாம் நுழையும் போது,
நம்மை நாமே நலம் விசாரித்து கொள்வது போல்,
நினைவுகளோடு நிஜத்தையும்
நம்மோடு கைகோர்த்து வைக்கும் 
கால இயந்திரமாய் நம் கல்லூரி !!

நாம் அமர்ந்த இருக்கைகள்,
நாளும் பேசிய கதைககள்,
பேச தயங்கிய எண்ணங்கள்,
ஏக்கப் பெருமூச்சில் 
மின்காந்த அலையொன்று
மின்னலென வந்து போகும் !!

இன்று வரை,
நம் எண்ணக்கடலிலே,
கல்லூரி நாட்களின் நினைவலையில் 
நிதமும் கால் நனைத்து சிறு பிள்ளையாய் 
மனதிற்குள் மகிழ்ந்திருந்தோம் !

இனி வரும் நாட்களில்,
இனிமை நிறைந்த
இந்த வெள்ளி விழா நினைவுகளும் 
அழியா ஓவியமாய் 
அனைவரின் உள்ளங்களில் 
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும் !!


                     - மே. இசக்கிமுத்து 



ஞாயிறு, ஜூன் 25, 2023

'ம்ம்'மென்ற மந்திரம் !!



முடிவெடுக்க முடியாமல் 
யோசிக்கும் போதெல்லாம்
முந்திக்கொண்டு வருவது 'ம்ம்' !

ஆசையோடு வரும்
அழகான விண்ணப்பத்திற்கும் 'ம்ம்' !
ஆமோதிப்பா இல்லை இது
அலைக்கழிப்பா?
குதூகலமாய் குழப்பிவிடும் 'ம்ம்' !

அழுப்பால் அமைதியாய்
அயர்ந்திருக்கும் போது
அலைபேசியில் அழைத்திடும்
அன்பான நட்பிற்கு
ஆனந்தமாய் 'ம்ம்' !

கடற்கரை மணலில்
கைகோர்த்து நடக்கும்
காதலர்களின் காந்த வார்த்தை 'ம்ம்' !
அவ்வப்போது
அவள் சொல்லும் 'ம்ம்'மென்ற
அழகில் அகிலம் மறந்து
அதிசயித்து அவனும் சொல்வான் 'ம்ம்' !

திருமணம் முடிந்து
திங்கள் ஐந்து ஆனபின்பு
ஆசையாய் அழைத்திடும் போது
அலுப்பாய் நீண்டதொரு 'ம்ம்' !

ஏழுகடல் தாண்டி
இளவரசியை மீட்க செல்லும்
இளவலின் இரவு நேர கதைகளுக்கு
குழந்தைகளின் குதூகலமாய் 'ம்ம்' !

அவசர வேளையில்
அழையா விருந்தாளி சொல்லும்
அடுத்த வீட்டு கதைகளுக்கு
நமக்கேன் வம்பென்று
நழுவும் வார்த்தையாய் 'ம்ம்' !

ஆசைகளும் கனவுகளும்
ஆர்பரித்த உள்ளத்தில்
அடுக்கடுக்காய் சோதனைகள்
அதிரும்படி வந்த போது
எனக்கு மட்டும் ஏனென்று
ஏக்க பெருமூச்சாய் ம்ம்' !

கோப புயலில் உதிர்ந்த வார்த்தைகள்
மௌனமாய் நீர்த்து நிற்கும்,
தென்றலாய் மீண்டும் வருடுவது எந்நாளோ?
ஏக்கத்தில் மேலோங்கும் 'ம்ம்' !

அகராதியில் இல்லாதது 'ம்ம்' ,
அழகான உச்சரிப்பில் சொல்லானது!
வார்த்தைகள் ஏதும் இல்லாதபோது
வசியம் செய்திடும் 'மம்' !

'ம்ம்'மென்பது தந்திரமல்ல,
மனதார சொல்லிப் பாருங்கள்
மயக்கும் மந்திரம் அது !!

                       
                          மே. இசக்கிமுத்து 

புதன், மே 24, 2023

நினைவெல்லாம் நட்பு!


சி
று புன்னகையில் தொடங்கி
சில்லென்று தென்றலாய்
சிந்தையில் வருடிச் செல்லும்!

நிலவொளி நேரத்தில் நம்
நினைவுகளில் நீண்டுச் செல்லும் !
கனவுகளில் கண்மூடி
கவலைகளை மறக்க செய்யும்!

துவண்டு நிற்கும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லி
அரவணைக்கும் தாய்மடி!

கள்ளமில்லா உள்ளமது
கலங்கம் சொல்லா எண்ணமது!
கனீரென சிரிப்பொலியில் 
கவலை மறந்த புன்னகை!
"ம்ம்" என்று வந்துவிட்டால்
எல்லாம் அதிலடங்கும்!!

கிடைக்கும் நேரத்தில்
நீண்டதொரு உரையாடல்,
பின்னே தொடர்ந்து வரும் குறுஞ்செய்தி!

நிறம் பார்த்து வந்ததல்ல,
மனம் பார்த்து, நல் புரிதல் கொண்டு,
நம்பிக்கை வைத்து மலர்ந்தது தான் 
நம் நட்பு!!

வசந்த காலத்தில்
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சியாய்,
மலர் மேல் வந்தமரும்
மார்கழி பனியாய்,
சாளரம் வழியே
சாரல் மழையை ரசித்திடும் மனதாய்,
மண் கொதிக்கும் வெயிலில்
மரத்தின் நிழலாய்,
ஆழ்மனதில் அழகிய உணர்வாய்
அமைந்ததே நம் நட்பு!!

 - மே. இசக்கிமுத்து