வெள்ளி, பிப்ரவரி 22, 2013

என் உலகம்

ளவேனில் இரவொன்றில்
இளைப்பாற அமருகையில்
இதமான தென்றலாய்
தெம்மாங்கு பாட்டிசைத்தாய்!

முதுவேனில் முகம் கலைந்து
புழுதி பறந்த பொட்டலிலே
ஒற்றையாய் நான் நிற்கையிலே
நிழலாய் நீண்டு நின்றாய்!

கார்கால வெள்ளத்தில்
அடை மழையின் அரற்றலுக்கும்
அஞ்சாமல் குதித்தெழும் குமிழியாய்
மனதினிலே நிலைத்திருந்தாய்!

கூதிர் காலத்தின்
இலையுதிர் மரம் போல
இல்லாமல் இருந்தாலும்,

முன்பனிக் காலத்தில்
முளைத்தெழும் தளிராய்
முகமலர்ந்து சிரித்து வந்தாய்!

பின்பனிக் காலத்தில்
பனித் திரை கிழித்து
பட்டென பாயும்
பகலவன் ஒளியாய்!

தென்றலாய், நிழலாய்
குமிழியாய், தளிராய்
ஒளியாய் ஒவ்வொரு நிகழ்விலும்
பழகிய இதயம் பக்கத்தில் உணர்ந்தேன்!

ஒன்றின் பின் ஒன்றாய்
வரிசையாய் வரும் காலங்களிலெல்லாம்
நம்பிக்கை தருவது
என்னோடு வரும் நட்பே தான்!

நட்புச் சூரியனை
நாளும் சுற்றும் கோள்களால்
இயங்குவது என்னுலகம்! ‌ 

                                  - மே.இசக்கிமுத்து