வியாழன், நவம்பர் 09, 2023

ஒரு தோழியின் தேடல்!!




டிக்கடி பார்த்த முகமாய் இருந்த நீ
அறிமுகம் ஆனபோது சிரித்த முகமானாய்!
நட்பெனும் வானில் நகர்வலம் வரும்
நிலவு தோழன் நீ!

கண்ணியமான நட்பிது தான் 
காமம் இல்லா உறவிது தான் !
காணத் துடிக்கும் போது,
காதலின் வலி கொடுத்தாய்!
காணும் போது கண்ணால் பேசி
கலவரம் செய்தாய்!
நீ பேசா நாட்களில்
இரவுகளை நீளச் செய்தாய்!
நினைவுகளில் மூழ்கச் செய்தாய்!

அடுக்கடுக்காய் பேசும்போது
அக்கறையாய் கேட்டுக் கொண்டாய்!
மனக்குழப்பம் மறக்கச் செய்தாய்
மனங் குளிர மாயம் செய்தாய்!
வார்த்தைகளற்று நிற்கும் போது,
வாஞ்சையோடு புன்னகை செய்தாய்!

மணிக்கணக்கில் பேசும்போது
மனதில் மலரும் மகிழ்ச்சி!
சொல்ல மறந்ததையெல்லாம்
செல்பேசியில் பகிர்ந்து கொண்டோம்!

மௌனத்தை மொழி பெயர்த்தாய்,
மெல்லிசையாய் தலையசைத்தாய்!
என் குரலில் மயக்கம் என்றாய்,
ஜில்லென்று கிறங்கச் செய்தாய்!
பொக்கிஷம் நீ என்றேன்
பொத்தி வைத்துக்கொள் என்றாய்!

தாகத்தின் போது தண்ணீரானாய்,
துன்பத்தின் போது கண்ணீரானாய்!
தவித்திடும் போது தாயின் மடியானாய்!
துவண்டிடும் போது 
தந்தையாய் தைரியம் தந்தாய்!

குழம்பிய மனதிற்கு
குறி சொல்லி தெளிய வைத்து,
சரியென பட்டதை சட்டென சொல்லிடுவாய்,
தவறென தெரிந்ததை,
தக்க சமயத்தில் உணர்த்திடுவாய்!

எங்கே நீ இருக்கின்றாயோ,
என்னை நீ நினைக்கின்றாயோ!
நிழலென உன் நினைவுகள்,
நிதமும் என்னை தொடர்கிறதே!

இருக்குமிடம் தூரமங்கே,
இரவெல்லாம் பாரமிங்கே!
தொலைத்து விடவில்லை,
தொலைவில் தான் இருக்கின்றாய்!
இருப்பிடம் தெரிந்தாலும்,
இங்கே நான் தேடுகின்றேன்!

- மே. இசக்கிமுத்து