வியாழன், செப்டம்பர் 17, 2009

இன்று ஒரு தகவல்!


ன்று ஒரு தகவல் என்றவுடன் நம் மனதில் சட்டென வந்து நிற்பவர் திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள். வானொலியில் எதை கேட்கிறோமோ இல்லையோ, இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர்கள் நிறைய பேர்கள் உண்டு. அந்த வரிசையில் நானும் ஒருவன். இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் காலங்களில் வானொலி கேட்பது தான் என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு. அதிலும் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தவறவிடுவதில்லை. அன்று காலை ஒலிபரப்பான இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துகளையும் நகைச்சுவை விசயங்களையும் நானும் என் நண்பன் வாஞ்சீஸ்வரனும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்வதுண்டு. இன்றும் கூட வாஞ்சீஸ்வரனை சந்திக்கும் போதெல்லாம் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி குறித்த நினைவுகளை சொல்லிக் கொள்வதுண்டு! அந்த அளவுக்கு திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுடைய இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி எங்கள் வாழ்வோடு ஒன்றிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

தினம் தினம் புது புது தகவல்கள், கருத்துக்கள் அதற்கு ஏற்ப ஒரு நகைச்சுவை கதையையும் சொல்லி நம் சிந்தனையை தூண்டிவிட்டு செல்வார். கருத்துக்களை யதார்த்தமாக சொல்லும் விதம், மண் வாசனை நிறைந்த நல்ல குரல் வளம் ஆகியவை தான் குழந்தைகள் முதல் பெரியவர்களின் செவி மடல்களை இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் பக்கம் திரும்ப செய்தன. முகம் அறியாத அந்த காலகட்டத்தில் கூட திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் மரணச் செய்தி (16.9.2009) உலகெங்கும் வாழும் தமிழர்களை மிகுந்த சொகத்தில் ஆழ்த்தியது. இதோ அவர் சொன்ன ஒரு தகவலை கிழே தருகிறேன், படிக்கும் போது நிச்சயம் அவர் நம் மனக் கண் முன்னே தோன்றி சொல்வது போல் இருக்கிறதல்லவா?

இன்று ஒரு தகவல்!
எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் ஒரு பொருளை தொலைச்சிட்டு கவலையா இருக்கார்.

ஆறுதல் சொல்லக்கூடாதா? சொன்னேன். காதுலே வாங்கல.

அந்தப் பொருள் கிடைக்கிறவரை சாப்பிடறதில்லேன்னு அடம்பிடிக்கிறார். தன் மனைவிமேல சந்தேகப்படறார். தான் வீட்டிலே இல்லாத சமயங்களில் அவளை கண்காணிக்க ஒரு வசதியில்லையேன்னு வருத்தப்படறார்.


இவர் ஜப்பான்ல இருந்திருக்கலாம்.
என்ன சொல்றீங்க? அங்கே உளவு பார்க்க நவீன வசதிகள், நுண்ணிய மின்னணு கருவிகள் பயன்படுதாம். எப்படி?

ஜப்பான்ல பெரிய நட்டத்தில போன ஒரு கம்பெனி நல்லா இயங்கறதா காட்டிக்கிட்டு வங்கிகள்லே மேற்கொண்டு நிறைய கடன் வாங்கிக்கிட்டே இருந்சுச்சாம். சந்தேகப்பட்ட பாங்க்காரங்க உண்மையை கண்டுபிடிக்க ஒரு உளவு நிறுவனத்தைப் பார்த்தாங்க. அந்த சமயத்துல அந்த கம்பெனி அக்கவுண்டெண்டுக்கு சொத்தைப்பல் காரணமா சிகிச்சைக்கு வந்தப்போ, ரகசிய கருவியை அவர் பல்லில் அவருக்கே தெரியாமல் பொருத்திட்டாங்க. அவ்வளவுதான் அப்புறம் கம்பெனி கூட்டங்கள்லே பேசற தகவல்கள் பாங்க்காரங்க காதில் விழுந்துக் கிட்டிருந்தது. கம்பெனிக்கு கடன் கொடுக்கறதை நிறுத்திட்டாங்க.

அது இங்கே இருந்திருந்தா பெரியவருக்கு உபயோகமா இருந்திருக்கும்.

அந்த பெரியவர் பல் இடுக்கிலே பொருத்திப்புட்டா அவர் போற இடம்.. என்ன பேசறார்ங்கிறதையும் கண்டுபிடிச்சிடலாம்.

அது சாத்தியமில்லை..ஏன்னா, அவர் தொலைச்சது அவரோட பல் செட்டைத்தான்!!

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009

சபாஷ் சரியா சொன்னீங்க!!


ங்கள் அலுவலகத்தில் 2003 டிசம்பர் மாதத்தில் ஒரு போட்டி தேர்வு நடத்தி 8 இளநிலை உதவியாளர்களை (மத்திய அரசு பணி) தேர்வு செய்தார்கள். இது சம்பந்தமாக எனது தம்பி சில விவரங்கள் வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு செய்து, இந்த போட்டி தேர்வின் மூலம் தேர்வானவர்களின் பணிமூப்பு பட்டியலை கேட்டிருந்தான். எங்கள் அலுவலகத்தில் இருந்தும் விவரங்களை கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் கொடுத்ததோ 2007 ஏப்பரல் மாதத்தில் நடந்த போட்டி தேர்வின் மூலம் தேர்வானவர்களின் பணிமூப்பு பட்டியல். தவறான தகவலை தந்து விட்டார்கள். அதனால் எனது தம்பி மீண்டும் எங்கள் அலுவலகத்தில் சரியான தகவல் தரும்படி மேல்முறையீடு செய்தான். மறுபடியும் எங்கள் அலுவலகத்தில் இருந்து 2003 டிசம்பர் போட்டி தேர்வு சம்பந்தமான விவரங்களை கொடுத்தார்கள், அதில் முதலில் அவர்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளவில்லை. பரவாயில்லை இம்முறை சரியான தகவல் தந்தார்களே என்று சமாதானப்பட்டுக் கொண்டான் என் தம்பி.

2003 டிசம்பர் மாதத்தில் நடந்த போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் எங்கள் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். நான் நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் பணியமர்த்தப்பட்டேன். ஐந்து வருடத்திற்கு பிறகு கடந்த ஏப்ரல் 2009ல் மேல்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பணிமூப்பு அவர்கள் அந்த போட்டி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பின்பு அந்த பணிமூப்பின் அடிப்படையில் தான் பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது.

ஒருமுறை இது சம்பந்தமாக தம்பியும் நானும் பேசிக்கொள்ளும்போது என்னிடம் எங்கள் அலுவலகம் தந்த விவரங்களை காட்டினான், ஒரு கனம் அதிர்ந்தே விட்டேன். ஏனேன்றால் அந்த பணிமூப்பு பட்டியலில் என்னுடன் அந்த போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு என்னுடன் பணிபுரியும் ஒருவர் எனக்கு அடுத்தபடியாக தான் வருகிறார், ஆனால் அவர் எனக்கு முன்பே 2008ல் பதவி உயர்வு பெற்று விட்டார். ஆனால் எனக்கு ஏப்ரல் 2009ல் தான் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எங்கள் அலுவலகம் தந்த விவரங்களின் படி பார்த்தால் எனக்கு பதவி உயர்வு கொடுத்த பிறகு தான் அந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். எனவே இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலில் எனக்கு அடுத்தபடியாக வரும் நபருக்கு எனக்கு முன்பாகவே பதவி உயர்வு எப்படி கொடுக்கப்பட்டது?, அது தவறு என்றும் எனவே எனக்கும் 2008 முதல் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எனது அலுவலகத்தில் நான் ஒரு மனு செய்தேன். ஒரு மாதம் கழித்து அலுவலக நிர்வாக அதிகாரி (Admistrative Officer) என்னை அழைத்து என்னுடை மனு பற்றி விவாதித்தார், அப்போது அவர் சொன்ன விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. " தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என் தம்பி செய்த மேல் முறையீட்டு மனு மீது அவர்கள் தந்த விவரங்கள் தவறாக தரப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார். மேலும் அந்த போட்டித் தேர்வில் தேர்வானவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலையும் அவர் காட்டினார், அதன் படி பார்த்தால் நான் குறிப்பிட்ட என்னுடன் பணிபுரியும் அந்த நபர் எனக்கு முன்பாக தான் இருக்கிறார், எனவே பதவி உயர்வில் எந்த தவறும் இல்லை. சரி நானும் ஒத்துக்கொண்டேன், ஆனால் நான் கொடுத்த மனுவிற்கு எழுத்துபூர்வமாக பதில் வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். எழுத்துபூர்வமாக எனக்கு பதில் தந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீண்டும் அவர்கள் தவறான தகவல் தந்ததாக ஒத்துக்கொண்டாக வேணடும் அதனால் அவர்களுக்கும் பிரச்சனை வரும் என்று எனக்கும் தெரியும். அதனால் என்ன தவறு செய்தால் ஒத்துக்கொள்ளட்டுமே என்று நானும் வந்து விட்டேன்.

இரண்டு வாரம் ஆகியும் எனக்கு எழுத்துபூர்வமாக பதில் வரவில்லையே என நினைத்துக் கொண்டிருக்கையில், கடந்த வாரம் (14.08.2009 ) எங்கள் அலுவலக நிர்வாக கட்டுப்பாட்டு அதிகாரி (Controller of Adminstration) என்னை அழைத்தார், இது சம்பந்தமாக தான் அழைக்கிறார் என்று எனக்கும் தெரியும். அவர் என்னிடம் பேசிய விதம் என்னை மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் சொன்னது இது தான், " ஏதேனும் விவரம் வேண்டுமென்றால் அலுவலகத்தில் கேட்க வேண்டுமாம், ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதுவும் என் தம்பி மூலமாக கேட்க வேண்டும், அதனால் எங்கள் இயக்குநர் என் மீது கோபமாக இருக்கிறாறாம். மேலும் எழுத்துபூர்வமான பதில் தந்துட்டேன் வாங்கிக்கோ, எதனாலும் பண்ணு, எப்படியும் ஒரு நாள் எங்கள் உதவி உனக்கு தேவைப்படும், நான் உன்னை மிரட்டுவதாக எடுத்துக்காதே, ஒரு அறிவுரையாக எடுத்துக்கோ " என்றாறே பார்க்கலாம். சபாஷ் சரியா சொன்னீங்க!! என்று சொல்ல தோன்றியது. ஒருபுறம் எனக்கு சிரிப்பும் வந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தவறான தகவல்களை தந்து தவறு செய்தவர்கள் அவர்கள், ஆனால் கடைசி வரை அவர்கள் தவறை ஒத்துக்கொள்ளாமல் பேசுகிறார்களே? என்ன சொல்வது? நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்களே " மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம் " , " வாத்தியார் செஞ்சா தப்பில்லை பள்ளி பிள்ளைங்க செஞ்சா பெரிய தப்பு ", ஒரு தவறை யார் செய்தாலும், அவர் உயர் அதிகாரியாகட்டும் அல்லது கீழ்நிலை பணியாளராகட்டும் தவறு தவறு தான், அதை ஒத்துக்கொள்ள வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், குற்றம் உள்ள மனசு என்றைக்கும் குறுகுறுத்துக்கொண்டே இருக்கும், தவறான தகவலை தந்து விட்டதாக என்னுடைய தம்பி மத்திய தகவல் ஆணையத்திடம் இரண்டாம் முறையீடு செய்தால், தவறை அவர்கள் ஒத்துக்கொள்ள தான் வேண்டும், அதற்கான அபராதமும் உண்டு. ஒரு வேளை என் தம்பி மத்திய தகவல் ஆணையத்திடம் இரண்டாம் முறையீடு கொடுத்தால் என்ன செய்வது என்று அவர்கள் தினம் தினம் யோசித்துக் கொண்டே இருக்கத் தான் செய்வார்கள். அரசாங்க அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ள வசதியாக தான் அரசாங்கம் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் விவரங்களை அளிக்கும் அரசாங்க அதிகாரிகள் அந்த தகவல்களை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து அளிக்க வேண்டும், ஏதோ கடமைக்காக கொடுத்தாக வேண்டுமே என்று இது போல செயல்பட்டால் அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதன் முழு பயனும் மக்களை சென்றடையும் என்பதில் சந்தேகமே!!