வெள்ளி, மார்ச் 21, 2014

காமிக்ஸ் உலகம் !


ர்ம வேட்டை, அழகியை தேடி, ஜனாதிபதி கொலை, வல்லவனுக்கு வல்லவன், ரத்த காட்டேரி... இந்த பெயர்களையெல்லாம் வாசிக்கும் போது ஏதோ தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில திரைப்படங்களின் பெயர்கள் போல இருக்கிறதல்லவா? இருக்கலாம், ஆனால் 1985-90களில் இந்த பெயர்கள் எல்லாம் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவையெல்லாம் 1985-90களில் வெளிவந்த காமிக்ஸ் கதைகளின் தலைப்புகள். 

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் காமிக்ஸ் புத்தகங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. வகுப்பு தோழன் வாஞ்சீஸ்வரனிடம் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. அதை வைத்து அவன் ஒரு மினி நூலகமே எங்கள் வகுப்பில் நடத்தி வந்தான். ஆசிரியர் வராத வகுப்புகளில் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் மத்தியில் நாங்கள், அதாவது நான், வாஞ்சீஸ்வரன், ப்ராங்கோ, ராம்குமார், கண்ணன் மற்றும் சிலர் பாட புத்தகங்களுக்கு நடுவில் காமிக்ஸ் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருப்போம். இப்போதிருக்கின்ற தனியார் தெலைக்காட்சி சேனல்கள், கேபிள் டிவி வசதிகள் வராமல் இருந்த நேரத்தில் முதன் முதலாக காமிக்ஸ் படக்கதை புத்தகங்களை வாசித்த போது தன்னை மறந்து அந்த காமிக்ஸ் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடுகிற ஒரு உணர்வு இருக்கிறதே, படித்து முடிக்கும் வரை வேறு உலகத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சியை, அந்த அனுபவத்தை என்னவென்று சொல்வது. 

முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் மிகவும் பிரபலம். ஒவ்வொன்றும் தனக்கென ஒரு முத்திரை பதித்து போட்டி போட்டுக் கொண்டு மாதந்தோறும் புது புது கதைகளை வெளியிடும். 25 பைசா, 50 பைசா என அப்பா தரும் சில்லரைகளை சேர்த்து வைத்து மாதந்தோறும் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிவிடுவேன். எங்கள் வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி சிவந்தா குளம் ரோட்டில் உள்ள சந்தியில் ஒரு கடையில் தான் புத்தகங்கள் வாங்குவேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதெல்லாம் வழியில் புத்தக கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகங்களிடையே ஏதேனும் புதிய காமிக்ஸ் புத்தகம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வருவதுண்டு. 

முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் கிடைப்பதே ரொம்ப கடினம். எப்போதாவது தான் வரும் ஆனால் வந்த உடனேயே விற்று தீர்ந்து விடும், அந்த அளவிற்கு லயனுக்கும் முத்துவிற்கும் நிறைய வாசகர்கள். அதனால் டிமாண்ட் அதிகம். அதன் விலை ரூ 1.50, ரூ 2.00 மற்றும் ரூ 3.00 என கதையின் நீளம் மற்றும் பக்கத்திற்கு ஏற்றவாறு விலை இருக்கும். மே மாத்தில் கோடை மலரும் தீபாவளி நேரத்தில் தீபாவளி மலரும் வெளியிடுவார்கள். அதன் விலையோ ரூ 5.00 முதல் ரூ 7.00 வரை இருக்கும். அது பற்றிய விளம்பரங்கள் இரண்டு மாதங்களுக்கு முந்தைய இதழ்களிலிருந்தே வர தொடங்கிவிடும், வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே வந்துவிடும். இரும்புக் கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரக் மற்றும் கவ்பாய் போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை.

ராணி காமிக்ஸ், பிரபலமான தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவந்த இதழ். மாதமிருமுறையாக 1ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் டானென்று கடைகளில் வந்து விடும். பள பளப்பான வளு வளு அட்டைப் படம் இதன் தனிச் சிறப்பு. ரூ 1.50க்கு ராணி காமிக்ஸ் தரமான தாளில் தந்தனர். பின் இதன் விலை ரூ 2.00 ஆனது. முகமூடி வீரர் மாயாவி, ராயன், ஜேம்ஸ் பாண்ட் 007, ஆசாத், மாடஸ்தி பிளைசி, மற்றும் தில்லான் போன்றோர் ராணி காமிக்ஸின் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு இதழிழும் ஏதேனும் ஒரு போட்டி அறிவிப்பு நிச்சயம் இருக்கும். இதன் கடைசி பக்கத்தில் அடுத்த இதழுக்கான கதையின் தலைப்பு படத்தோடு போட்டிருப்பார்கள். ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் ஆகியவற்றில் வரும் கதைகளெல்லாம் வெளிநாட்டுஆங்கில காமிக்ஸ்களின் தமிழ் பதிப்பாக இருந்தாலும் விறுவிறுப்பு மற்றும் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது. 

நிறைய புத்தகங்களை படிக்க தூண்டியதே இந்த காமிக்ஸ் கதை புத்தகங்ளின் மூலம் கிடைத்த வாசிப்பு அனுபவமும் ஆர்வமும் தான் என்பதில் மாற்று கருத்தே கிடையாது. புத்தகங்களின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதர்கான முதல் காரணியாக இருந்ததே இந்த காமிக்ஸ் புத்தகங்கள் தான். இன்றும் பழைய புத்தக கடையில் மற்றும் வேறு எங்கேயாவது தமிழ் காமிக்ஸ் புத்தகத்தை பார்க்க நேர்ந்தால் இந்த பசுமையான நினைவுகளில் மூழ்கிவிடுகிறது மனசு. அது ஒரு காமிக்ஸ் உலகம்.

மே.இசக்கிமுத்து..

வியாழன், மார்ச் 13, 2014

அறிவிலியாய் இருந்து விடு!


ரியெனப் பட்டதை
சட்டெனச் சொல்லி
புரிய வைத்த முயற்சிகளெல்லாம்
மலரினை மறைத்து
முற்களை பறித்த காயங்களாய்
ஆறிட அடம்பிடித்துக் கொண்டிருந்த போது,

பட்டுணர்ந்த ஞானமொன்று
நெஞ்சினுள்ளமர்ந்து சொன்னதின்று,
அறிவிலியாய் இருந்து கொண்டு
ஆமாம் சரியென்றும்
தவறென்று தெரிந்தாலும்
தலையாட்டி வைத்து விடு!

மகிழ்ச்சியில் முகமும்
மலர்ந்திடும் மலராய்!
உறவினர் நண்பர்கள் ஊரார்
உறவினில் விசனங்கள் தவிர்த்திட
சமயத்தில்
அறிவிலியாய் இருப்பதில்
ஆதங்கம் தேவையில்லை!

சிரித்துக் கொண்டே
புரிந்து கொண்டேன்,
அறிவிலியாய் இருப்பதற்கும்
ஞானமொன்று வேண்டுமென்று!

                                  -மே.இசக்கிமுத்து