புதன், ஆகஸ்ட் 06, 2008

திண்ணை !!

சென்ற வாரம் சனிக்கிழமையன்று இரவு 8.30 மணியிருக்கும், சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே உள்ள சிறிய திண்ணை படியில் காற்றாட அமர்ந்திருந்தேன். அந்த சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தது. 8.30 மணிக்கே எங்கள் வரிசையில் உள்ள வீடுகளின் கதவுகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. சிறார்களின் சத்தம் அங்கில்லை. அனைவரும் வீட்டினுள்ளே இருந்துவிடுகிறார்கள். இரவு சாப்பிட்டு விட்டு திண்ணையில் காற்றாட அமர்ந்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறதே, அப்பப்பா சொல்ல முடியாது, அனுபவித்து பார்க்க வேண்டும்.


சிறு வயது நினைவலைகள் மனதில் நிழலாட தொடங்கியது. எங்கள் தெருவில் இருந்த வீடுகளெல்லாம் ஓட்டு வீடுகள் தான். எல்லா வீட்டின் முன் வாசல் அருகே திண்ணை உண்டு. வரவேற்பறை போல திண்ணையை பயன்படுத்துவதுண்டு. யாரேனும் வீட்டுக்கு வந்தால் முதலில் திண்ணையில் தான் "அப்பாட" என்று உட்கார்வார்கள். வேலை நிமித்த பேச்சாகட்டும், அரசியல் விவாதமாகட்டும், பெண்கள் சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஊர் நடப்புகளை பேசுவதாகட்டும் எல்லாவற்றிற்கும் அடைக்கலம் திண்ணை தான். எல்லாவற்றிற்கும் மேல் மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து வீட்டு பாடங்களை எழுதுவதும் பின்பு விளையாடுவதும் அந்த சுகமே தனி தான்.


சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம், எங்களின் விளையாட்டுக் களமாகவே மாறிவிடும் அந்த திண்ணை. காலை தொடங்கி இரவு வரை எங்கள் ஆட்டங்கள் அங்கே அரங்கேறும். முழு ஆண்டு தேர்வு விடுமுறை காலங்களில் இன்னும் சொல்லவே வேண்டாம். விளையாட்டுகள் பல பல, வீடு கட்டுவது, இலைகள் செடிகளை பறித்து வந்து சோறு சமைப்பது, களி மண்னால் சாமி செய்து அதற்கு கொடை விழா நடத்துவது, தாயம், பல்லாங்குழி, ஐஸ்பால், கல்லா மண்ணா என விளையாட்டுகள் வித விதமாய் அரங்கேறும். சில சமயம் பெற்றோர்களுக்கு எங்கள் திண்ணை விளையாட்டுகள் பெரும் தொல்லையாக மாறுவதும் உண்டு. சில நேரம் எங்களின் தொல்லைகள் எல்லை மீறும் போது அம்மாவிடம் திட்டுகளும் வாங்குவதுண்டு. அதற்கு மறுநாளே விளையாட்டு இடம் நண்பன் வீட்டு திண்ணைக்கு மாறியிருக்கும். குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுவது போல எங்களின் விளையாட்டு இடமும் திண்ணை திண்ணையாக மாறி கொண்டே இருக்கும். இரவு சாப்பாடு கண்டிப்பாக திண்ணையில் வைத்து தான். பக்கத்து வீட்டு நண்பர்களோடு சேர்நது கூட்டாஞ்சோறு சாப்பிடுவது. வித விதமான கதைகள் சொல்லி மகிழ்வது, திண்ணையோடு மகிழந்த நாட்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.


கால மாற்றத்தில், தற்பொழுது கட்டப்படுகின்ற அனேக வீடுகளில் திண்ணை இருப்பதில்லை. நிலத்தில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும், அதில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விடுகிறார்கள், குழந்தைகளின் விளையாட்டு இடம் பற்றி கவலை கொள்வதற்கு அவர்களுக்கு நேரமில்லை. தற்கால சிறுவர்களின் முக்கிய விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதை நாம் ஆங்காங்கே தெருக்களில் காணலாம். சில சிறுவர்களின் மாலை நேர விளையாட்டாக சைக்கிள் ஓட்டுல். மேலும் சிறுவர்களின் நட்பு வட்டம் பள்ளி தோழர்களை விட்டு விரிவடைய மறுக்கின்ற சூழ்நிலையில் தான் தற்பொழுது இருக்கின்றது. விசாலமாக சிந்திக்கும் மனநிலை வீட்டுக்குள்ளே மறைந்துவிடுது. இதெல்லாம் அவசரயுகத்தின் அலங்கோலங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது !!

7 கருத்துகள்:

Divya சொன்னது…

உங்கள் மலரும் திண்ணை நினைவுகள்......சுவாரஸியமாக இருந்தது படிக்க:))

Divya சொன்னது…

\\மேலும் சிறுவர்களின் நட்பு வட்டம் பள்ளி தோழர்களை விட்டு விரிவடைய மறுக்கின்ற சூழ்நிலையில் தான் தற்பொழுது இருக்கின்றது. விசாலமாக சிந்திக்கும் மனநிலை வீட்டுக்குள்ளே மறைந்துவிடுது. இதெல்லாம் அவசரயுகத்தின் அலங்கோலங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது !!\


சிறுவர்களின் நட்பு வட்டம் மட்டுமில்லை......வளர்ந்தவர்களின் நிலையும் அதுவே:((

ஹேமா சொன்னது…

வணக்கம் இசக்கி முத்து.உங்கள் தளம் வந்து அலசுகிறேன்.இன்னும் நிறைய இருக்கு அலச."தங்கை ஒருத்தி இருந்திருந்தால்...
உறவுகள்..."கவிதைகள் அருமை.

ஓ..திண்ணை.ஞாபகப்படுத்தி
விட்டீங்க பழைய ஞாபகங்களை.
எங்கள் வீடு அப்போ கிடுகால் வேய்ந்திருந்த காலம்.அப்போ என் வீட்டின் முன்பகுதியில் கட்டில் போலவே செம்மண்ணால் போட்ட திண்ணை ஒன்று.அதற்கு சாணகத்தால் மெழுகிக் கோலமும் போட்டிருப்போம்.முன்னுக்குத் துளசி மாடம்.அடி மன ஆழங்களில் மட்டுமே அந்தக் காட்சிகள்.இனிக் கனவிலும் எட்டமுடியாத் தூரம் அவைகள்.ஞாபகங்களைக் கிளறியமைக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

திண்ணை நினைவுகள் என்று தொடராகப்போட்டுக்கொண்டிருந்தோமே.. உங்களுடையதையும் அங்கே இணைத்துவிடலாமே...

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இந்த பதிவில் போய் உங்களுடைய இந்த திண்ணை பதிவின் லிங்கை குடுத்துடுங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-05-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-2008/ உங்கள் பதிவை பாலபாரதிக்கு தெரிவித்திருக்கிறேன்.. மீண்டும் இந்த லிங்க்கை காப்பி செய்து அடித்து பாருங்க ...

ராமலக்ஷ்மி சொன்னது…

நான் சொல்ல வந்ததையே முத்துலெட்சுமி சொல்லி விட்டார்கள். இணைத்து விட்டீர்களா? முத்துலெட்சுமியின் திண்ணைப் பதிவைப் படித்த பாதிப்பில் நான் அவருக்கு மடலாக எழுதிய திண்ணை நினைவுகளை என் பதிவில் படித்தீர்களா தெரியவில்லை. இதோ ஹேமா சொல்வது போல ஒருவரது நினைவுகள் மற்றவரது ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் நினைவுகளைத் தட்டி எழுப்பி விடத்தான் செய்கின்றன.