வியாழன், ஜனவரி 17, 2013

ரோஜா செடியின் விண்ணப்பமொன்று....


டி காற்றென்றால்
அங்கும் இங்கும் அசைந்தாடி
நறுமணப் பாடலோடு,
தலையாட்டி தட்டாங்கல்லாடி
குதூகலித்திருந்தோமே!

மங்கையரே,
கூந்தலில் சூடிக் கொள்ள
தேடி வரும்போது,
அய்யோவென ஓடிடத்தான்
அறியவில்லை எங்களுக்கு!
முட்களிருந்தும் கூட
முட்டிவிட மனமில்லை!
அத்தனை பூக்களையும்
தட்டிப் பறித்தீர்களே
தயவேதுமில்லாமல்!
கன்னி பெண் நாங்கள்
கைம்பெண்ணாய் ஆனோமே!

மலர்ந்தவுடன் மங்கையின்
கூந்தலில் குடியேறுவதில்
வருத்தமொன்றும் இல்லை,
அலங்காரமாய் பார்ப்பதில்
எங்களுக்கும் ஆனந்தம் தான்!

ஒய்யார மங்கையரே
ஒரே ஒரு விண்ணப்பம்,
அத்தனை பூக்களையும்
அப்படியே பறிக்க வேண்டாம்,
ஒன்றிரெண்டாவது விட்டு வையுங்கள்
அலங்கரித்து கொள்வதில்
எங்களுக்கும் ஆசையுண்டு!

                       - மே.இசக்கிமுத்து

திங்கள், டிசம்பர் 31, 2012

நாட்குறிப்பு 2012 (டையரி)

ன்று நீஆனந்தமாய்
வந்தாய் என் கையில்,
ஆசையோடு எழுதி வைத்தேன் என் பெயரை
அழகிய உன் முகப்பில்!

புத்தாண்டு தீர்மானங்கள் இன்னதானென்று
புதிதாய் கிடைத்த உன்னில் எழுதிகொண்டேன்!

முதலொரு வாரம் இதன்படி செய்யென்று
முத்து முத்தாய் எழுதி வைத்தேன்.
பின்னொரு வாரம் கடமையென
முன்னும் பின்னும்,
கிறுக்கலானது கையெழுத்து...

நாளை நாளையென்று நழுவி சென்றேன்,
பின் அலமாரியில் ஓர் அங்கமானாய்.
அவ்வப்போது தூசி தட்டி
அடுக்கி வைக்கும் பொருளானாய்..

இன்று,
அடுக்கி வைத்த புத்தகங்களை
சுத்தம் செய்த போது,
ஏளனமாய் சிரித்தாய் நீ
உன் கேள்விகள் எனக்கு புரிகிறது,
விடை தெரியாமல் இன்று நீ
விடை பெறுகின்றாய்..

நாளைக்கு புதிதாய் ஒன்று
மறுபடியும் புத்தாண்டு தீர்மானங்கள்..

                                      -  மே.இசக்கிமுத்து..

திங்கள், டிசம்பர் 24, 2012

காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு...

 
            பள்ளி பருவத்தில் நாம் படித்து, ரசித்து, பாடிய பாடல்களை இப்போது நாம் நினைவுபடுத்தி பார்க்கும் போது அதில் கிடைக்கும் சுகமே தனி தான். நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிடும், ஒரு வித ஏக்கம் நம் மனதில் வந்து குடியேறிவிடும். அந்த வகையில் நான் முதல் வகுப்பில் படித்த போது தமிழ் பாட புத்தகத்தில் கடைசி பக்கத்தில் இந்த தாத்தா பாட்டு இருந்தது என்று நினைக்கிறேன். கடைசி வரியில் தாத்தா தும்முவதாக வரும் போது ஆசிரியை முக பாவத்தோடு தும்மல் போட்டு சொல்லி தந்ததும், நாங்களும் தும்மி தும்மி விளையாடியதும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த பாட்டு உங்களுக்கும் ஞாபகம் வருமானால் வாருங்கள் நாம் நம் பள்ளி பருவத்திற்கே சென்றுவிட்டு வருவோம்....
 
 
காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்
மாடி மேல நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்
 
ஆந்தை ரெண்டு கோழி மைனா
அண்டங்காக்கா குருவிகள்
பாந்தமாக தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டு நின்றன
 
உச்சி மேல நின்ற தாத்தா
உடல் குலுங்க தும்மினார்
அச்சும் அச்சும் என்றபோது
அவை அனைத்தும் பறந்தன...