திங்கள், டிசம்பர் 09, 2013

முற்றம் கொண்ட வீடு வேண்டும்..

முற்றத்தில் பாய் விரித்து
முதலில் வந்து படுத்திருப்பாய்,
கால் மேலே கால் போட்டு
கையிரண்டை தலையில் வைத்து
நிலவு என்னை அழைத்திடுவாய்!

அன்றாட நிகழ்வுகளை
அலுப்புடனே சொல்லிடுவாய்
சரியா தவறா என்று நான்
யோசிக்கும் முன்பே - நீ
சரியென்றும் அது தவறென்றும்
தலையாட்டி சொல்லிடுவாய்!

ஏதேதோ வார்த்தைகளை
ஏற்ற இறக்கத்தோடு
எப்படியிருக்கு இது
அருமை அருமையென
ஆனந்த சிரிப்பொலி!

கவிதையென காகிதத்தில்
கருப்பு மையால் எழுதுமுன்னே - நீ
கழித்து போட்ட வார்த்தைகளை
கவனமாய் சேகரிப்பேன்
இன்னொரு கவிதை!

நீ முணுமுணுத்த
பாடல் வரிகளையெல்லாம்
பள்ளி பிள்ளையாய்
பாடி திரிகிறேன் நான்!

இப்போதெல்லாம்,
நீ எங்கெங்கு சென்றாலும்
தொடர்கிறேன் நான்,
முன்பு போல பேச வேண்டும்,
முற்றம் கொண்ட வீடு வேண்டும்!

                                                   -மே.இசக்கிமுத்து

கருத்துகள் இல்லை: